நாட்டின் 75% மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு: சட்ட வரைவு முதல் பகுதி தயார்
, திங்கள், 24 ஜனவரி 2011 (19:35 IST)
நமது நாட்டில் கிராமப்புறங்களில் வாழும் 90 விழுக்காடு மக்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் 50 விழுக்காடு மக்களுக்கும் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவின் முதல் பகுதியை தேச ஆலோசனைக் குழு தயாரித்து முடித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையிலான இந்தக் குழு கடந்த ஆண்டு அக்டோபரில் தயாரித்து அளித்த சட்ட வரைவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்த நிபுணர் குழு, போதுமான உணவுப் பொருட்கள் அரசின் கையிருப்பில் இலலை என்று கூறி நிராகரித்தது.அதைத் தொடர்ந்து தற்போது உருவாக்கப்பட்டுவரும் புதிய உணவு பாதுகாப்பு சட்ட வரைவின் படி, கிராமப்புறங்களில் வாழும் 46 விழுக்காடு ‘முன்னுரிமைக் குழு’ மக்களுக்கும், நகரத்தில் வாழும் 28 விழுக்காடு மக்களுக்கும் மாதத்திற்கு கிலோ ரூ.3க்கு அரிசியும், ரூ.2க்கு கோதுமையும், ரூ.1க்கு இதர தானிங்களும் பெறுவதை சட்டப் பூர்வ உரிமையாக்குகிறது. இதுமட்டுமின்றி, 'பொதுப் பிரிவி' ன் கீழ் கிராமப்புறங்களில் வாழும் 44 விழுக்காடு மக்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் 22 விழுக்காடு மக்களுக்கும் மாதத்திற்கு 20 கிலோ உணவு, தானியங்களை அரசு அளிக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையில் பாதி விலைக்கு வழங்கவதையும் அடிப்படை சட்டப்பூர்வமாக்குகிறது.ஆக, ஒட்டுமொத்தமாக கிராமப்புறங்களில் வாழும் 90 விழுக்காடு மக்களுக்கும், நகர்ப்புறங்களில் வாழும் 50 விழுக்காடு மக்களுக்கும் சேர்த்து, நாட்டின் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினருக்கு குறைந்த விலையில் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதை சட்டப்பூர்வமாக்குகிறது உணவுப் பாதுகாப்பு சட்டமாகும்.