தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் ஒரிரு தினங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் மட்டும் கடந்த 13ஆம் தேதி இரவு மழை பெய்தது. பொதுவாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவு வருகிறது.
இந்நிலையில், மார்ச் 24ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் ஓரிரு தினங்களில் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருவண்ணாமலை, நீலகிரி உட்பட பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தேதி கணிப்பின்படி 26 முதல் 28 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 5 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். நிலநடுக்க தேதி கணிப்பின்படி மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த 13ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், மார்ச் 25ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகத் தெரிவித்திருந்தேன். மார்ச் 24ஆம் தேதி மியான்மரில் 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.