தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழகத்தில் கடந்த நவமபர் 23 முதல் 27 வரை பலத்த மழை பெய்தது. இதனையடுத்து 30ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இதன்பிறகு தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்தாலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் டிசம்பர் 5 வரையும், டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளிலும் மழை பெய்தது.
ஆனாலும் 15 நாட்களுக்கு மேலாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 13ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நாகையை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் டிசம்பர் 14 முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை கணிப்பின்படியும், நிலநடுக்க தேதி கணிப்பின்படியும் டிசம்பர் 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் குறிப்பிட்டுள்ளார்.