முந்திரி செடிகளை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல அடிக்கப்படும் எண்டோசல்ஃபான் எனும் பூச்சிக் கொல்லி மருந்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நிரூபித்தால் அதனை தடை செய்வோம் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ஜெய்ராம் ரமேஷிடம் எண்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லியை கேரள அரசு தடை செய்திருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எண்டோசல்ஃபானை கேரள அரசு தடை செய்துள்ளது, அந்த அரசின் நடவடிக்கையை நான் மதிக்கிறேன். அந்த பூச்சிக்கொல்லியால் விவசாயிகளுக்கு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டால் அதற்கு தேச அளவில் தடை விதிப்போம்” என்று கூறியுள்ளார்.
எண்டோசல்ஃபான் பல்வேறு பயிர்களுக்கான ஒரு பொதுவான பூச்சிக் கொல்லி என்றும், அதைப் போன்று குறைந்த விலையில் கிடைக்கும் பூச்சிக்கொல்லி வேறெதுவும் இல்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
கேரளத்தில் மட்டுமல்ல, கர்நாடக மாநில முந்திரி விவசாயிகளும் எண்டோசல்ஃபானை பயன்படுத்தியதால் பாதிப்பிற்குள்ளான காரணத்தினால் அந்த மாநிலத்தில் ஒரு தொடக்கமான 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.