Publish Date: Thu, 21 Feb 2019 (07:30 IST)
Updated Date: Thu, 21 Feb 2019 (08:34 IST)
தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள், திருப்பரங்குன்றம், திருவாரூர் எம்.எல்.ஏக்கள் மறைவால் 2 தொகுதிகள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி என மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ தொகுதி காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.அதுதான் தமீமுன் அன்சாரியின் நாகப்பட்டினம் தொகுதி
கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற இவர் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தன்னுடைய மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமீமுன் அன்சாரி சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்துள்ளதாகவும், அவருடைய அணியில் இருந்து ராமநாதபுரம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே தமீமுன் அன்சாரி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.