தற்போதைய வானிலை கணிப்பின்படி வரும் 28ஆம் தேதி முதல் 30 வரை தமிழ்நாட்டில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
கடந்த 23ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் 25 முதல் 30ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன்.
அதேபோல், அக்டோபர் 26ஆம் தேதி கடலூர், புதுச்சேரி, ஈரோடு, துறையூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அக்டோபர் 27ஆம் தேதி கணிப்பின்படி கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் 28 முதல் 30ஆம் தேதி வரை கன மழையும், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் நவம்பர் 2முதல் 5ஆம் தேதி வரை மேற்கண்ட இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
கடந்த 23ஆம் தேதி அனுப்பி கடிதத்தில் அக்டோபர் 25ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தது போல், இந்தோனேஷியாவில் சுமத்ரா அருகே உள்ள மெண்டவாஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவில் பலத்த பூகம்பம் ஏற்பட்டு சுனாமி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.