தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
நவம்பர் 16ஆம் தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை, திண்டுக்கல், தேனி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்தேன். அதேபோல் நவம்பர் 18 முதல் 20 வரை மேற்கண்ட இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், நவம்பர் 22ஆம் தேதி வானிலை கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பனை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் நவம்பர் 25 முதல் 30 வரை திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களிலும், திண்டுக்கல், தேனி, மதுரை உட்பட தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், கரூர், ஈரோடு, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், பெரும்பாலான வட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 27 முதல் 30ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்சமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
கடந்த முறை வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் நவம்பர் 22ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல் 21ஆம் தேதி இரவு தைவான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.