தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 25ஆம் தேதி முதல் வட தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
கடந்த 11ஆம் தேதி கணிப்பின்படி அக்டோபர் 14 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும், அக்டோபர் 14 முதல் 21 வரை பலத்த மழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தேன்.
அக்டோபர் 14ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் உட்பட ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட ஒருசில தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் பரவலாக மழை பெய்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு மழை தீவிரமடையவில்லை.
அக்டோபர் 23ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆந்திராவின் நெல்லூர் பகுதியை மையமாகக் கொண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால் வரும் 25 அல்லது 26ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கடலூர், புதுச்சேரி, சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பிற இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 24, 25, 26 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் 25 முதல் 30ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யவும், குறிப்பாக 25, 29, 30 தேதிகளில் பலத்த பெய்யவும் வாய்ப்புள்ளது.
நிலநடுக்க கணிப்பின்படியும், வானிலை கணிப்பின்படியும் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மழைராஜ் தெரிவித்துள்ளார்.