Publish Date: Mon, 27 Feb 2017 (08:26 IST)
Updated Date: Mon, 27 Feb 2017 (08:29 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் இதுகுறித்து வலியுறுத்தியதோடு, அவர் முதல்வராக இருந்தபோது விசாரணை கமிஷனும் அமைக்க உள்ளதாக அறிவித்தார்.
ஆனால் விசாரணை கமிஷன் அமைக்கும் முன்பே அவர் ஆட்சியை இழந்துவிட்டதால் விசாரணை கமிஷன் அமைக்க முடியாமல் போனது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாளை ஓபிஎஸ் அணி எம்பிக்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கவுள்ளனர்.
மைத்ரேயன் தலைமையில் இன்று டெல்லி செல்லும் ஓபிஎஸ் அதிமுக எம்பிக்கள் நாளை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தவுள்ளனர். ஜனாதிபதி, இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று ஓபிஎஸ் அணி எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.