இராக்கில் ஒரு கட்டுமானத் தளத்திலிருந்து தமது நாட்டவர்கள் 18 பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என துருக்கி தெரிவித்துள்ளது.
தலைநகர் பாக்தாத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் விளையாட்டு மையமொன்றில், கேரவேனில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை இராணுவ சீருடையில் முகமூடி அணிந்தபடி வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அரசினர் என்று தம்மைக்கூறிக்கொள்ளும் குழுவினருக்கு எதிரான விமானத் தாக்குதல்களை துருக்கி அண்மையில் ஆரம்பித்திருந்தது.
மேலும், துருக்கிய விமான தளங்களிலிருந்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல்களை நடத்துவதற்கும் அந்நாடு அனுமதி வழங்கியிருந்தது.
இது தவிர, வட சிரியாவில் ஐ.எஸ்.குழுவினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்குப் பிறகு துருக்கிய சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளார்.