ஐயப்பனும் வாஸ்து பரிகாரமும்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2015 (20:11 IST)
ஐயப்ப சீஸன் வரப்போகிறது. ஆனால், இந்தக் கட்டுரை சீஸனுக்காக எழுதப்படுவது அல்ல. சில உண்மைகளை நமது வாசகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்படுகிறது.


 

 
ஐயப்பசுவாமி சக்தி மிகுந்தவரா இல்லையா என்பதை விட, மாலைபோட்டு இருமுடிகட்டி சபரிமலையில் ஏறுவதால் பலன் கிடைக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியம்.
 
நமது புராணங்களிலும் எகிப்திய புராணங்களிலும் ஏரளமான குறியீட்டுக் கடவுள்கள் உண்டு.
 
வாரியார், புலவர் கீரன் தொடங்கி இன்றைய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் வரை இந்த குறியீட்டுக் கடவுள்களைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள்.
 
ஆனால்,மகாபாரதத்தில் அரவான் என்ற பாத்திரம் ஏன் வருகிறது? எதற்காக அவனை பலியிடவேண்டும்? பாண்டவர்களின் வெற்றிக்கு பகவான் கிருஷ்ணன் இருக்கையில் அரவானின் மரணம் எதற்காக தேவைப்படுகிறது? 
 
சர்வ லட்சணமும் பொருந்திய அரவான் தனது கடைசி ஆசையாக ஒரு பெண்ணைக் கேட்கையில் கிருஷ்ணர் ஏன் பெண் அவதாரம் எடுத்து வரவேண்டும், கிருஷ்ண பகவானுக்கு ஒரு பெண் பிள்ளையை பிடித்துவரத் தெரியாதா... இது போன்ற கேள்விகளை நமது ஆன்மீகப் பேச்சாளர்கள் எழுப்புவது இல்லை.
 
வில்வீரனான அர்ச்சுனன், பிருஹன்னளை என்ற பெண்வேடம் பூண்டு மறைந்து வாழ்ந்ததும், அவனது மகன் அரவான் பாரதப் போர் வெற்றிக்காக கொல்லப்பட்டதும், அர்ச்சுனனின் மனைவி அல்லியின் பெயரால் “அல்லி ராஜ்ஜியம்” என்ற சொற்றொடர் உருவானதும், எல்லாவற்றுக்கும் மேலாக மோகினி அவதாரப் புகழ் கிருஷ்ணர் அவனது உற்ற தோழனாக இருப்பதும், போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகிற கதை அல்ல. மேற்கண்ட எல்லா விஷயங்களிலும் ஒரு சரடுபோல பெண்மையின் எழுச்சியும் ஆண்மையின் வீழ்ச்சியும் குறியீடாகக் காட்டப்படுவதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
ஐயப்பன் கதையும் அப்படித்தான்.
 
இங்கும் பகவான் கிருஷ்ணன்தான் சிருஷ்டி கர்த்தராக இருக்கிறார்.
 
பகவானின் இன்னொரு அவதாரமான விஷ்ணுவை புதன் என்ற கிரகத்தின் அம்சமாக இந்து ஜோதிடம் கருதுகிறது. புதன் இரட்டைத் தன்மையுள்ள கிரகம்.
 
புதனுக்கு அலிகிரகம் என்ற பெயரும் உண்டு. ராசிகளில், புதனுக்கு உரிய கன்னி ராசியை மலட்டு ராசி என்கிறோம். மலட்டுத்தன்மை என்பது எதையும் உற்பத்தி செய்யமுடியாத, எல்லாவற்றையும் வாங்கிக் கொள்கிற தன்மையைக் குறிக்கிறது.
 
ஐயப்ப சுவாமியும் அப்படித்தான். அவர், உற்பத்தி செய்வதற்காக படைக்கப்பட்ட கடவுள் அல்லர். நாம் தீர்க்க வேண்டிய ‘கர்மா’வின் இன்னொரு அடையாளம்தான் ஐயப்ப வழிபாடு.
 
சபரிமலைக்கு மாலை போடுவதாலோ, 48 நாட்கள் விரதம் இருப்பதாலோ என்ன லாபம் என்றால், அந்த பக்தரின் கர்மவினை தற்காலிகமாக மட்டுப் படுத்தப்படுகிறது. ‘அவர் 18 வருஷம், நான் 27 வருஷம்’ என்று பெருமையாக சபரி மலைக்குப் போய் வந்த கணக்கை சொல்பவர்களின் வீடுகளில் பார்த்திருக்கிறேன்.,, ஒன்று... அந்த நபரின் தந்தை வாழ்க்கையில் வெற்றி பெறாதவராக இருப்பார். இல்லை இளம் வயதிலேயே இறந்து போயிருப்பார்.
 
பாலக்காட்டைச் சேர்ந்த பங்கஜாஷன் என்பவர் 47 தடவை மகரவிளக்கு தரிசனம் செய்திருக்கிறார். 561 முறை மலைக்குப் போய் வந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து தனது தந்தையையே பார்த்தது இல்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய விஷயம்.
 
சபரிமலையை, ஏழு கோட்டைகளாகப் பிரித்து இருக்கிறார்கள். ஏழாவது கோட்டையில்தான் பதினெட்டுப் படிகள் அமைந்துள்ளன. இந்தப் படிகளின் வடகிழக்கே மாளிகைப்புரம் கோவில் உள்ளது. இதில் மாளிகைப்புரத்தம்மை எனும் பெண் தெய்வம் வீற்றிருக்கிறது. நைருதியில் கணபதி இருக்கிறார். நைருதியை கன்னிமூலை என்றும் குறிப்பிடுவார்கள். அதனால்தான் ‘கன்னிமூலை கணபதியே’ என்ற சரணகோஷம் உருவானது.
 
வடகிழக்கும் தென்மேற்கும் ஆண்களுக்கு உரியவை. ஆனால், சபரிமலையிலோ ஒன்று பெண் தெய்வத்துக்குப் போய்விடுகிறது. இன்னொன்று ஒரு பெண்ணால் (பார்வதி தேவியால்) உருவாக்கப்பட்ட கணபதிக்குப் போய்விடுகிறது. ஆக, ஆண்களுடைய இடத்தில் ஆண்கள் இல்லை.
 
வாஸ்து பலன்களைச் சொல்லும்போது, ஈசானியம் மற்றும் நைருதியில் உள்ள சமையல் அறை அந்த வீட்டில் பெண் அதிகாரத்தை உயர்த்துகிறது என்று குறிப்பிடுகிறோம்.
 
எது நோயை உருவாக்குகிறதோ அதுவே நோயை குணமாக்குகிறது என்பார்கள். முற்பிறவியில் பெண்களால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பிறவியில், சபரி மலைக்குப் போய் அந்த பாதிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது எனது அனுமானம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments