அமெரிக்க அதிபரின் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' போன்ற இந்தியாவின் அதிமுக்கியப் பிரமுகர்களுக்கான போயிங் 747, 700 ஆகிய இரண்டு ஜெட் விமானங்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் துவக்கி வைத்தார்.
இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஜெட் விமானங்கள் முறையே அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்குத் தங்களின் முதல் பயணத்தை மேற்கொண்டன.
குடியரசுத் தலைவரோ அல்லது பிரதமரோ தனது முழு அலுவல்களையும் வானில் பறந்தபடியே இந்த விமானங்களில் இருந்தபடி கவனிக்க முடியும். அணு ஆயுதத் தாக்குதல் போன்ற நெருக்கடி நேரங்களில் வானில் பறந்தபடி தரையில் உள்ளவர்களுக்குக் கட்டளைகளை பிறப்பிக்க முடியும்.
தலைநகர் டெல்லியில் உள்ள பாலம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ரிப்பன் வெட்டி விமானங்களின் இயக்கத்தைத் துவக்கிவைத்த குடியரசுத் தலைவர், "நமது பயணம் இப்போது இன்னும் அலுவல்மயமாகவுள்ளது. சுலபமான பயணத்துடன் கவனித்து, ஆராய்ந்து முடிவெடுக்க நமக்கு நிறைய நேரமும் கிடைக்கும்" என்றார்.
"புதிய விமானத்தில் அதிஉயர் தொழில்நுட்ப கருவிகளும், துல்லியமான தகவல் பறிமாற்றக் கருவிகளும் பொறுத்தப்பட்டுள்ளன" என்று விமானப் படைத் தலைமைத் தளபதி ஃபாலி ஹெச் மார்ஷல் தெரிவித்தார்.
மொத்தம் 4 பிரிவுகளைக் கொண்டுள்ள இந்த விமானத்தில் 60 பயணிகள் பயணிக்க முடியும்.
முதலாவது பிரிவு குடியரசுத் தலைவருக்கானது. மெல்லிய, அடர்த்தியாக மரப் பலகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவில் 6 தோல் இருக்கைகள் உள்ளன. முன்னணி பொழுதுபோக்கு, தகவல் பறிமாற்றக் கருவிகளுடன் குடியரசுத் தலைவருக்காக ஒரு படுக்கை அறையும் உள்ளது.
இந்த விமானங்களில் நவீன ஏவுகணைப் பாதுகாப்புக் கருவிகளும் உள்ளன. நவீன ராடார்களுடன் ஏவுகணைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்படாத வகையில் இந்த விமானங்களின் மேற்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் மூலம் தரையில் உள்ளவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக், ஃபிரான்சின் ஸ்னெக்மா நிறுவனங்கள் தயாரித்துள்ள இரண்டு CFM-56 என்ஜின்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மீண்டும் மீண்டும் வானிலேயே எரிபொருள் நிரப்பி 6,000 நாட்டிகல் மைல்கள் வரை (11,100 கிலோ மீட்டர்) தொடர்ந்து பயணம் செய்ய முடியும். மேலும், இந்த விமானங்கள் மணிக்கு 410 நாட்டிகல் மைல் வேகத்தில் 41,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை.
தற்போது அதி முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்தி வரும் போயிங் 737 விமானத்திற்கு மாற்றாக இந்த விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.