ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 27-வது லீக் போட்டி மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. பூவா தலையா வென்ற மும்பை அணி, ராஜஸ்தான் அணியை பேட் செய்யும்படி அழைத்தது.
தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், அஸ்னோட்கரும் களம் இறங்கினர். போலக்கின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஸ்மித் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த யூசுப் பத்தான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து அஸ்னோட்கருடன் ஷேன் வாட்சன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 32 ரன்கள் எடுத்திருந்த வாட்சன், பிராவோ பந்தில் போல்டு ஆனார். இவர் ஒரு சிக்சர், 4 பெளண்டரிகளை விளாசினார்.
இவரை தொடர்ந்து ராஜஸ்தான் வீரர்கள் யாரும் சரியாக விளையாட வில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அஸ்னோட்கர் 39 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 16.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 103 ரன்களுக்கு சுருண்டது. ஐ.பி.எல். தொடரில் எடுக்கப்பட்ட 2-வது குறைந்த பட்ச ரன் எண்ணிக்கை இதுவாகும்.
மும்பை அணி தரப்பில் நெக்ரா 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, பிராவோ, ரஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஜெயசூர்யா- தகவாலே முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தனர். ஜெயசூர்யா 18 ரன்கள் எடுத்திருந்தபோது வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் தகவாலே 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 4 பெளண்டரிகளை விளாசினார்.
பின்னர் வந்த உத்தப்பா, ராஜஸ்தான் அணி வீரர்களின் பந்து வீச்சை விளாசி தள்ளினார். வந்த வேகத்தில் பிராவோ ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து உத்தப்பாவுடன் நாயர் இணை சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 34 ரன்களுடன் உத்தப்பாவும், 12 ரன்களுடன் நாயரும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக நெக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் 4 ஆட்டத்தில் தொடர்ந்து தோல்வி அடைந்த மும்பை அணி தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம் ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு மும்பை அணி நேற்று முற்றுபுள்ளி வைத்தது.