சச்சின் ஏன் வித்தியாசமான பேட்ஸ்மேன்?
, புதன், 5 ஜனவரி 2011 (15:40 IST)
கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மிக முக்கியமான சதம் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ள சச்சின் டெண்டுல்கர் இப்போது உள்ள அல்லது முந்தைய நட்சத்திர வீரர்களைக் காட்டிலும் ஏன் வித்தியாசமானவர் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
பொதுவாக ஒரு பேட்ஸ்மென் 20 அல்லது 22 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட்டை துவக்குகிறார் என்றால் 8 அல்லது 10 ஆண்டுகள்தான் அவரது உச்சக்கட்ட காலமாக இருக்கும் அதன் பிறகு வீழ்ச்சி தொடங்கி விடும். ஆனால் சச்சினைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்பது 20 ஆண்டுகள் ஆகியும் இல்லாமல் இருக்கக் காரணம் அவர் சிந்தனாபூர்வமான கிரிக்கெட் வீரர் என்பதே.நேற்று டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்து வீச்சையும் அவர் எந்த வித அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்ட விதம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது.ஒவ்வொரு முறை அவர் சரியாக ரன் எடுக்காத போதும் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தன் மட்டையின் மூலமே பதிலளித்து வந்துள்ளார்.சச்சினின் பழைய அதிரடி போய்விட்டது என்று வருத்தப்பட்ட அவரது முந்தைய ரசிகர்களுக்கு பதில் கொடுத்த ஒரு நாள் போட்டி இரட்டை சதம் சச்சினின் இந்த பிந்தைய காலக்கட்டத்தில்தான் நடந்தேறியது என்பதும் அவர் இன்னமும் தனது ஆதிக்கவாத கிரிக்கெட் ஆட்டத்த்தை முற்றிலும் விட்டுவிடவில்லை என்பதற்கும் அத்தாட்சியாக விளங்கியுள்ளது.துவக்கத்தில் சச்சின், டேல் ஸ்ட்யென் வீசிய 5 ஓவர்களையும் தானே எதிர்கொள்ள நேரிட்டது. மற்ற நாட்களை விட நேற்று அதிகம் பந்துகள் அவரது மட்டையைக் கடந்து சென்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது பொறுமை, பந்துக்கு பந்து மாறும் பேட்டிங் உத்தி அவர் விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல என்பதை நிரூபித்தது.டெண்டுல்கரை ஒரு 20 பந்துகளாவது பீட்டன் செய்த ஸ்டெய்ன் கடைசியில் "சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதில் ஆற்றலைச் செலவழிப்பதில் பயனில்லை. ஏனெனில் அது அவருடைய தினமாக இருந்தால் அது அவருடைய தினம் மட்டுமே." என்று கூறியிருப்பதும் டெண்டுல்கரின் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான சிந்தனாபூர்வமான அபிமானத்தை அறிவுறுத்துகிறது.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விரட்டி ஆட முயன்று ஆட்டமிழந்து வந்தார். இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றபோது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதில்லை என்று சபதம் எடுத்து இரட்டைச் சதம் அடித்தார் சச்சின். இது அவருடைய மனோபலத்தைக் காண்பித்த பல தருணங்களில் ஒரு தருணம்.