இந்தியா விளையாடிய விதம் பற்றி ரெக்கார்ட் புக்ஸில் இருக்காது. ஒருநாள் தொடரை 2- 0 என்றும் டெஸ்ட் தொடரை 1- 0என்றும் முழுதும் இழந்துவிட்டு தோல்வியுடனேயே இந்திய அணி திரும்பியுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது.
முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி 3 ஓவர்களில் 16 ரன்களை அடிக்க முடியாமல் (?) 2 ஓவர்களை பந்துகளை வெறுமனே வேடிக்கை பார்த்ததில் ஒருவர் ஸ்டெய்ன் இவர் 2வது டெஸ்டில் 46 ரன்கள் அடிக்கிறார் அதுவும் மேலேறி வந்து ஷாட்களை ஆடுகிறார்!! முதல் இன்னிங்ஸில் நல்ல இந்திய பந்து வீச்சிற்கு எதிராக அபாரமாக ஆடிய பிலாண்டர் 2வது இன்னிங்சில் வெற்றிக்கு ஆடாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
கேப்டன் ஸ்மித்திடமிருந்தோ, பயிற்சியாளரிடமிருந்தோ களத்தில் நிற்கும் ஸ்டெய்ன் மற்றும் பிலாண்டருக்கு எந்த வித அறிவுரையும் வரவில்லை. இவையெல்லாம் ஏதோ நடந்திருக்கிறது என்ற சந்தேகத்தை கடுமையாகக் கிளப்புகிறது.
2 வது டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்டை வெற்றி பெறும் நிலையில் வந்து தென் ஆப்பிரிக்கா விட்டுக் கொடுத்ததால் 2வது டெஸ்ட் போட்டியில், காலிஸ் ஓய்வு பெறும் போட்டி வேறு, தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதற்காக இந்தியா ஆடியதா என்று கடும் சந்தேகங்கள் எழுகின்றன.
ஏனெனில் பழைய பந்தில் 46 ஓவர்கள் கூடுதலாக வீசி 146 ஓவர்களை சணல்தெரியும் வரை வீச வேண்டிய அவசியம் என்ன? எப்படியும் தோற்கப்போகிறோம் இதற்கு எதற்காக புதிய பந்து என்று தோனி கடுப்பில் எடுக்காமல் இருந்தாரா? ஜாகீர் கான், மொகமது ஷமி ஆகியோர் முதல் டெஸ்டில் வீசிய ஆக்ரோஷம் 2வது டெஸ்டில் காணாமல் போனது ஏன்? இந்திய வீரர்களின் உடல் மொழி தொய்வாகக் காணப்பட்டது ஏன்?
தென் ஆப்பிரிக்கா ஜெயிக்கட்டும் என்பது ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தமா? அதனால்தான் கடுப்பான தோனி புதிய பந்தை எடுக்காமல் கோபத்தில் பைத்தியக்காரத் தனமாக தெரியட்டும் என்று 146 ஓவர்கள் பழைய பந்தில் வீசினாரா? என்ன காரணம்? இவையெல்லாம் பில்லியன் டாலர்கள் கேள்வி அல்ல. எந்த ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் வரும் கேள்விதான்.
முதல் டெஸ்ட் போட்டியை வேன்டுமென்றே தென் ஆப்பிர்க்கா டிரா செய்தபோது அந்த நாட்டு ரசிகர்கள் கோபாவேசத்தை காண்பித்தனர். அதேபோல்தான் 2வது டெஸ்டில் தோனியின் உத்தி இந்திய பேட்ஸ்மென்கள், பவுலர்கள், ஃபீல்டர்களின் உத்வேகமின்மையும் நமக்கு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
ஜெஃப்ரி பாய்காட் கூறுவது போல் தென் ஆப்பிரிக்காவில் இவ்வளவு சொத்தையாக பிட்ச் போடப்பட்டது கிடையாது. பாய்காட் கூறுகிறார் தான் தெஆ கேப்டனாக இருந்தால் பிட்ச் போட்டவரை சாடியிருப்பேன் என்கிறார். இந்தியாவிடம் தென் ஆப்பிரிக்கா கருணையாக நடந்து கொண்டது என்கிறார் பாய்காட்.
ஆனால் நம் சந்தேகம் என்னவெனில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் இந்த டெஸ்ட் தொடர் விளையாடப்பட்டுள்ளதோ என்பதே. கோலி வாண்டரர்ஸில் அடித்த முதல் நாள் சதமே சிறந்த சதம், புஜாரா 2வது இன்னிங்ஸில் அடித்த 153 ரன்கள் நல்ல இன்னிங்ஸ்தான் ஆனால் அது கிட்டத்தட்ட இந்திய மட்டைப் பிட்ச் போல் ஆனபிறகு ஆடிக்கொண்டிருந்தார்.
ஆனால் ரஹானேயின் தன்னம்பிக்கை, தைரியம், பொறுமை நிச்சயம் அவரை ஒரு சிறந்த பேட்ஸ்மெனாக உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பழைய பந்தில் ஏகப்பட்ட ஓவர்களை அபத்தமாக வீசி விட்டு தோல்வி கண்டு பிறகு சில தீர்ப்புகளால் தோல்வியுற்றோம் என்று தோனி கூறுவது யாருக்கு கூறும் சமாதானம் என்பது புரியவில்லை.