கச்சிதமான த்ரில்லர் என்று மும்பை போலீஸை சொல்லலாம். படம் நடப்பது எர்ணாகுளத்தில். அங்கு பணியிலிருக்கும் கமிஷனர் மற்றும் இரண்டு அசிஸ்டெண்ட் கமிஷனர்களின் அடாவடி போக்கை வைத்து மீடியாக்கள் வைத்த செல்லப் பெயர்தான் மும்பை போலீஸ். இந்த மூவரும் - ரகுமான், பிருத்விராஜ், ஜெய்சூர்யா - மும்பையில் ட்ரெயினிங் எடுத்தவர்கள்.
ஏ.சி.பி. பிருத்விராஜ் அடாவடி பேர்வழி. திருமணத்தில் விருப்பமில்லாதவர். தண்ணி பார்ட்டி. இன்வெஸ்டிகேட்டிங் என்று வந்தால் ஆண், பெண் பால் பேதம் பார்க்காமல் நொறுக்குகிறவர். அதனாலேயே சக அதிகாரிகளுக்கும் பிருத்விராஜ் என்றால் அலர்ஜி.
இன்னொரு ஏ.சி.பி.யாக வரும் ஜெய்சூர்யா பிருத்விராஜுக்கு நேரெதிர். கொஞ்சம் லவ்வர் பாய் டைப். அப்பாவின் உயர்மட்ட ஸ்டேட்டஸ்க்காக விருப்பமில்லாமல் ஐபிஎஸ் படித்து ஏ.சி.பி. என்பது கௌரவ மெடலாக குத்திக் கொண்டிருப்பவர். சொந்த வீட்டின் புறக்கணிப்பால் பிருத்விராஜுடன் நெருக்கமாக நட்பை வளர்த்துக் கொண்டவர்.
ரகுமான் இவர்களின் உயர் அதிகாரி. அதேசமயம் பிருத்விராஜின் தங்கையின் கணவரும்கூட. அலட்டாமல் இருவரின் ஆர்ப்பாட்டங்களை ரசிக்கிற, ஜென்டில்மேன்.
இந்த மூன்று கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையாசிரியர்கள் பாபி - சஞ்சய் துணையுடன் விளையாடியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
ஜெய்சூர்யாவின் கொலை வழக்கை துப்பறியும் பிருத்விராஜ் கொலையாளி யார் என்பதை கண்டு பிடிக்கிறார். காரை ஓட்டிக் கொண்டே கொலையாளியை கண்டு பிடித்ததை ரகுமானிடம் சொல்போனில் சொல்லும் போது எதிர்பாராமல் அந்த விபத்து நிகழ்கிறது. இதுதான் படத்தின் முதல் காட்சி. விபத்தில் பிருத்விராஜின் நினைவுகள் மறந்து போகிறது. இப்போது வழக்கை முதலில் இருந்து தொடங்க வேண்டும். அந்தப் பொறுப்பை பிருத்விராஜிடமே ஒப்படைக்கிறார் ரகுமான். தான் யார் என்பதே தெரியாத நிலையில் திக்கு தெரியாத காட்டில் சிக்கிக் கொண்ட மாதிரி ஆகிறது பிருத்விராஜின் நிலைமை. தட்டுத் தடுமாறி வழக்கு விசாரணையை முதலில் இருந்து தொடங்குகிறார்.
செலுலாயிடு படத்துக்குப் பிறகு பிருத்விராஜுக்கு கிடைத்த மறறொரு சிறந்த படம் மும்பை போலீஸ். மிடுக்கும், அடாவடியுமாக பிளாஷ்பேக் காட்சியிலும், தான் யார் என்பதே தெரியாத தடுமாற்றத்துடன் விசாரணை செய்யும் நிகழ்காலத்திலும் மனிதர் அசத்தியிருக்கிறார். ரசிகனை ஏமாற்றுகிற வித்தையை செய்யாமல் நேர்மையாக படத்தை கொண்டு போயிருப்பதற்கு திரைக்கதையாசிரியர்கள் பாபி - சஞ்சய்க்குதான் நன்றி சொல்ல வேண்டும். அந்த நேர்மைதான் படத்தின் பலமே.
கதையோட்டத்தில் நமக்கு பலர் மீது சந்தேகம் வருகிறது. ஆனால் குற்றவாளி யார்? கடைசிவரை நம்மால் யூகிக்க முடிவதில்லை. மினிமம் பட்ஜெட்டில் தயாரான படத்தில் ஒளிப்பதிவு இந்தளவு கிளாஸாக இருப்பது நம்ப முடியாத ஆச்சரியம். கேமரா கோணங்களும், லைட்டிங்கும் அற்புதம். அதே மாதிரி இசை. படத்தின் டைட்டிலில் வரும் இசை அப்படியே நம்மை படத்துக்குள் கொண்டு செல்கிறது.
Gay சமாச்சாரத்தை மலையாள சினிமா இந்தளவு வெளிப்படையாக கையாண்டதில்லை. இதுதான் முதல்முறை. மற்ற நடிகர்கள் மும்பை போலீஸில் நடிக்க தயக்கம் காட்டியதற்கும், பிருத்விராஜ் நடித்தே தீருவது என்று முடிவு செய்ததற்கும் இதுதான் காரணம். படத்தின் பிரதான முடிச்சாக Gay விஷயத்தை வைத்திருப்பது வெறும் அதிர்ச்சிக்காக மாறிவிடும் ஆபத்து அதிகம். ஆனால் பிருத்விராஜின் நடிப்பு அதனை கடந்துவிடுகிறது.
மலையாள சினிமா பரிட்சார்த்தமான முயற்சியில் வேகமாக முன்னோக்கி நகர்கிறது. அதனை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் எல்லாவித குணநலன்களையும் கொண்டிருக்கிறது மும்பை போலீஸ். கோவா திரைப்படத்தில் Gay சமாச்சாரம் சொல்லப்பட்டாலும், அங்கே அது காமெடியாகிவிடுகிறது. இதில் அப்படியல்ல. மலையாள சினிமாவின் உள்ளடக்கத்தில் காணும் அதே மேம்பாட்டை திரைக்கதையிலும் பார்க்க முடிகிறது. நிகழ்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் முன் பின்னாக நகரும் திரைக்கதையில் சின்னதாககூட உறுத்தல் இல்லை. ட்ராஃபிக் படத்தின் திரைக்கதையை எழுதியவர்களும் இதே பாபி - சஞ்சய்தான். இவர்கள் தனியாக கவனிக்கப்படும் காலம் ஏற்கனவே புலர்ந்துவிட்டது.
எந்த மொழியிலும் ரீமேக் செய்ய தகுதியான க்ரைம் த்ரில்லர். பிருத்விராஜின் வேடத்தில் நடிக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வியே.