கடலூர் அருகே சிங்கிரி குடி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை தரிசித்தனர்.
இந்தியாவில் 16 திருக்கரங்கள் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயங்கள் ராஜஸ்தானிலும், சிங்கிரிகுடியிலும் மட்டுமே உள்ளன.
சிங்கிரிகுடியிலுள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 19-ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலைகும்ப கலசங்கள் வேத மந்திரங்கள், நாகசுரம் முழங்க கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. காலை 10-30 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 19 கோபுரங்களில் உள்ள கலசங்களில், புனித நீர் ஊற்றி, வேதமந்திரங்கள் ஒலிக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை 60 பட்டாச்சாரியார்கள் வேதங்கள் ஓதி, மந்திரங்கள் பாடி நடத்தி வைத்தனர்.
கும்பாபிஷேக புனித நீர் கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. மலர்களும் தூவப்பட்டன. கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடைசியாக 1990-ம் ஆண்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.