webdunia photoWD கனிகளில் பறித்த பின்னும் ஜீவனுடன் இருப்பது எலுமிச்சைதான் என்றும், அது மங்களகரமானது என்றும் ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன் கூறுகிறார்!நமது பண்பாட்டு ரீதியான பழக்க வழக்கங்களில் உள்ள அர்த்தங்களை விவரித்த வித்யாதரன், எலுமிச்சையின் குணங்களையும், அதனைப் பயன்படுத்துவதில் உள்ள ரகசியங்களையும் விளக்கினார். மஞ்சள் மங்களகரமான நிறம். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டிய பொருட்களில் பட்டியலைத் தயாரிக்கும் பொழுதும், புத்தாடை புனையும் பொழுதும், நிச்சயதார்த்தம் செய்து எழுதும் ஓலையிலும் ஒரு ஓரத்தில் அல்லது 4 ஓரத்திலும் மஞ்சளைத் தடவுகின்றோம். ஏனெனில் அது மங்களமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில்தான் எலுமிச்சை உள்ளது. வேதங்களில் அதர்வன வேதத்தில் முதலில் தேவதைகள், அதிதேவதைகள் ஆகியவற்றிற்கு பரிகாரப் பூஜைகள் செய்யும் போது எலுமிச்சைப் பழத்தை பலியிடுவது வழக்கம். அதற்குக் காரணம், அந்தப் பழம் ஜீவனுள்ளதாக கருதப்படுகிறது. ஜீவன் உடையதைதானே பலியிட முடியும். webdunia photoFILE அறிவியலபடி எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த சிட்ரிக் அமிலம் கிருமி நாசினி. பித்தம், கபம் போன்றவற்றையெல்லாம் நீக்கக்கூடியது. இந்தப் பழத்தில் இருந்து வீசக்கூடிய வாசமே குதூகலமான சூழலை உருவாக்கவல்லது. எலுமிச்சைக் கன்று, மரம் ஒரு வீட்டில் இருந்தால் வைத்தியரிடம் செல்ல வேண்டிய தேவையில்லை, வாஸ்து பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்று முன்னோர்கள் கூறுவார்கள். webdunia photoFILE இந்த அளவிற்கு மருத்துவ குணமும், வீடு கட்டியிருக்கும் மனை, வீடு அமைந்திருக்கும் மனை மற்றும் கட்டட அமைப்புகளில் உள்ள குறைகளை நீக்கும் சக்தி எலுமிச்சைக்கு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கனிகளின் அரசன் என்று எலுமிச்சையை சொல்லலாம். அதனால்தான் பிரபலமானவர்களைப் பார்க்கும் போது மரியாதை நிமித்தமாக இந்தக் கனியைத் தருவது வழமை. நோயுற்றவர்களைக் காணச் செல்லும் போதும், நோயுற்றவரிடம் காணச் செல்பவர்கள் எலுமிச்சையை அளித்து நலம் விசாரிப்பது பழக்கத்தில் உள்ளது. இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. நோய்வாய்பட்டவரிடம் இருந்து எதுவும் பார்க்க வருபவரிடம் தொற்றாது. அதே நேரத்தில் நோயுற்றவர் குணமாகவும் எலுமிச்சை உதவும். எனவேதான், அந்தப் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும். அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம், எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள். போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது. பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன் உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.