Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மீனம்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2013 (15:45 IST)
FILE
துயரங்களுக்காகத் துவளாத நீங்கள் நாளை நமதே என்ற நம்பிக்கையில் வாழ்வீர்கள். நல்லது செய்தே நலிந்தவர்கள். உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

புது வீடு கட்டிப் புகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், வீண் விரையம், இனந்தெரியாத கவலைகள் வந்துச் செல்லும். சிலர் உங்கள் வாயைக் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம்.

பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி வந்துச் செல்லும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோவில் விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. என்றாலும் தூக்கம் குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. முன்பின் தெரியவாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்ல ஆதாயம் தேடாதீர்கள்.

தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும்.மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்கும் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் புது தொழில் தொடங்கும் முயற்சிகள், பெரிய முதலீடுகள் வேண்டாம். ஜுன் மாதம் முதல் போட்டிகளை சமாளிக்க புது திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்டாதீர்கள். தள்ளிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம், ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரி பொருள் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை அலுவலகத்தில் சின்ன சின்ன அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். ஜுன் 13-ந் தேதி முதல் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். இழந்த சலுகைகளையும், உரிமைகளையும் மீண்டும் பெறுவீர்கள்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்வியை தொடர்வீர்கள். மே மாதம் வரை அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். தாயாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் விலகும். திருமணம் கூடி வரும். மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

முயன்று தவறினாலும் அனுபவ அறிவால் சாதித்துக் காட்டும் வருடமிது.

பரிகாரம்:

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் அருள்பாலிக்கும். ஸ்ரீசிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீகைலாச நாதரையும், சனீஸ்வரரையும், திருவாதிரை நட்சத்திர நாளளில் சென்று வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments