Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : கும்பம்

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : கும்பம்
, சனி, 21 ஏப்ரல் 2012 (20:12 IST)
FILE
எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும் போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடிகள் நீங்கள் தான். கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தை காட்டி விலைக்கு வாங்க முடியாது. பெற்ற பிள்ளைகள் முதல் வளர்ப்புப் பிராணிகள் வரை வரம்பு மீறி நடந்து கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள். சுவையான சாப்பாட்டை விரும்பும் நீங்கள், சில நேரங்களில் காடு, மலைகளில் கிடைக்கும் காய், கனிகளில் திருப்தியடைவீர்கள். வாக்குவாதம் என வந்து விட்டால் வரிந்துக் கட்டி வாதாடுபவர்களே!

உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சுருங்கிய முகம் மலரும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்தப் பிரச்சனைகளுக்கு இந்த வருடத்தில் தீர்வு கிடைக்கும். வீட்டில் எப்போதும் ஒரு மௌனம் நிலவியதே! ஏதாவது பேசப் போனால் சண்டையில் முடிந்ததே! இனி அன்யோன்யம் உண்டாகும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சிலநேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள். புது சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அவர்களின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு பல இடங்களில் மணமகள் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி மணப்பெண் அமையும். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய நண்பர்களும் அறிமுகமாவார்கள்.

வைகாசி, ஆனி மாதங்களில் திருமணத்தை கோலாகளமாக நடந்தி முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியடைவீர்கள். தந்தையாருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் வந்ததால் பின்வாசல் வழியே நீங்களும், முன் வாசல் வழியிலே அவரும் வந்துபோக நேர்ந்ததே! அப்பாவுக்கு உடல்நிலையும் பாதித்ததே! 23.6.2012 முதல் 14.8.2012 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனைவிக்கு அறுவைசிகிச்சை வரக்கூடும். உறவினர்கள், உடன்பிறந்தவர்களுடன் உஷாராக பழகுங்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

17.5.2012 முதல் குரு நான்காம் வீட்டில் நுழைவதால் வேலைச்சுமை, ஏமாற்றம், மன உளைச்சல், ரத்த அழுத்தம், தாயார் மற்றும் உறவினர் பகை வரக்கூடும். போராடி குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வாகன விபத்து வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல பலவகையில் தடைகள் வந்ததே! இனி சிக்கல்கள் நீங்கும். பணம் வரும். ஆனால், முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை ராசிநாதன் சனிபகவான் அஷ்டமத்துச்சனியாக வருவதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பண இழப்பு, காரியத் தடைகள், ஏமாற்றங்கள் வந்து போகும். உரிமைக்காக நீதிமன்றங்கள் செல்ல நேரிடும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். உறவினர்களில் சிலர் முகத்துக்கு முன்னால் புகழ்ந்தும் முதுகுக்குப்பின்னால் இகழ்ந்தும் பேசுவார்கள். வெளியூர் பயணங்களின் போது விலையுயர்ந்த ஆபரணங்களை தவிர்ப்பது நல்லது. வங்கிக்கு பணத்தை செலுத்த செல்லும் போதும், எடுத்து வரும் போதும் கவனத்தை சிதறவிட வேண்டாம்.

12.9.2012 முதல் 9-ம் வீட்டிற்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். மாசி, பங்குனி மாதங்களில் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். பல வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப் பாருங்கள். லேசாக தலைவலி, உடல் சோர்வு வந்து நீங்கும். அரசியல்வாதிகள் மற்றவர்களை விமர்சித்து பேசவேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானம் தேவை. பாதியிலேயே நின்றுபோன கட்டிட வேலைகளை முழுமையாக முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்டகாலமாக போகாமல் இருந்த குலதெய்வக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

2.12.2012 முதல் ராகு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டிற்கு செல்வதால் தந்தையுடன் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள் வந்துபோகும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது நன்கு படித்து பார்த்து கையெழுத்திடுங்கள். கேது ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு வருவதால் தாயாரின் உடல் நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பழைய கடன் தீரும். நவீன ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள். குல தெய்வக் கோவிலை சொந்த செலவில் புதுப்பிப்பீர்கள். அரிமா, ரோட்டரி சங்கத்தில் மருத்துவ முகாம்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கன்னிப்பெண்களே! வயிற்றுவலி, முகப்பரு, கண்ணுக்குக் கீழே இருந்த கருவளையம் விலகும். கல்யாணம் சிறப்பாக முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கவேண்டாம்.

மாணவர்களே! நினைவாற்றல் கூடும். அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரிகளே! அதிரடி மாற்றங்கள் செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்க டீவி, ரேடியோவில் விளம்பரம் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புதிய கொள்முதல் செய்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் இனி ஒத்துழைப்பார்கள். இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விடாமல் நிதானமாக பதில் சொல்லுங்கள்.

உ‌த்‌தியோகஸ்தர்களே! யாரோ செய்த தவறுக்கு உங்களை பலிகடா ஆக்கினார்களே! நீதிமன்ற ஆணை பெற்று பணியில் சேருவீர்கள். உயர்மட்ட கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பி பணி புரிவீர்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகைகளும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கணினி துறையினர்களே! குடும்பத்தை பிரிந்து சென்று சம்பாதிப்பீர்கள்.

அரசியவாதிகளே! தலைமைக்கு நீங்கள் நெருக்கமாக இருந்தாலும், மாவட்டமும், வட்டமும் விரித்த வலையில் சிக்கினீர்களே! இனி பெரிய பொறுப்புகள் தேடிவரும்.

கலைஞர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.

விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் குறைந்ததே! இனி கிணற்றில் நீர் சுரக்கும். பழைய பம்புசெட்டை மாற்றுவீர்கள். வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும்.

இந்த புத்தாண்டு பிரச்சனைகளிலும், செலவுகளிலும் சிக்க வைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.

பரிகாரம்
ஸ்ரீஅஷ்டபுஜக் காளி. தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil