Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : விருச்சிகம்

த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : விருச்சிகம்
, சனி, 21 ஏப்ரல் 2012 (19:52 IST)
FILE
ஏர்முனையாக இருந்தாலும், போர் முனையாக இருந்தாலும் எதிலும் முதலில் நிற்கும் நீங்கள், எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி காலத்தை கழிக்காமல் உழைப்பால் உயர்பவர்களே! எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நீங்கள், புரட்சிகரமான தொலை நோக்குத் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். மனதில் பட்டத்தை பளிச் சென்று பேசி உண்மைகளை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். சில சமயங்களில் பலருக்கு எதிரியாகவே தெரிவீர்கள்.

உங்கள் ராசிக்கு தன வீடான இரண்டாம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். சிரித்துப் பேசி சிற்றுண்டி சாப்பிட மட்டும் இருந்த வி.ஐ.பி நட்பை இனி சரியாக பயன்படுத்தி பல வேலைகளை முடிப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்தலெல்லாம் போதும், இனி களத்தில் நேரடியாக குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள்.

சித்திரை மாதத்தில் செலவுகள் இருந்தாலும் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஊரே மெச்சும்படி திருமணத்தை நடத்துவீர்கள். பல நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு இனி வேலை கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே! இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். 13.4.2012 முதல் 22.6.2012 வரை செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சிலருக்கு புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். புது சொத்து வாங்குவீர்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பெரிய பதவிகள் தேடி வரும்.

17.5.2012 முதல் குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். மறைவாக இருந்த நீங்கள், பல விசேஷங்களில் முன்வரிசையில் காணப்படுவீர்கள். பணத்தட்டுபாடு குறையும். அரசு பதவி கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வழக்குகளில் வெற்றியுண்டு. அரைகுறையாக நின்றுபோன கட்டிடவேலைகளையும் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனை தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். என்ன தான் கடினமாக உழைத்தும் கையில் ஒரு காசு கூட தங்கவில்லையே என வருந்தினீர்களே! இனி நாலுகாசு தங்கும்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் உண்டு. வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை வந்து சந்திப்பார்கள். வேலையில்லாமல் மன உளைச்சலுடன் இருந்தீர்களே, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். மூத்த சகோதரர் பண உதவி செய்வார். பால்ய நண்பர்களுமஉங்களின் நிலையறிந்து உதவுவார்கள். 12.9.2012 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் அலைச்சல், வேலைச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களில் ஒரு சிலர் உதாசீனப்படுத்துவார்கள். மறைமுகப் பகை வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் சந்தேகங்கள் வரக்கூடும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் ஈறு வீங்கி வலிக்கும். சாலைகளை கடக்கும் போதும், வீட்டில் குளியலறையை பயன்படுத்தும் போதும் காலில் அடிபடாமல் பார்த்து கொள்ளுங்கள்.

ஆவணி, தை, மாசி மாதங்களில் திடீர் பணவரவு உண்டு. அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கப் பாருங்கள். இடவசசியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கப் பாருங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். மன உளைச்சல், இரத்த அழுத்தம் வரக்கூடும். கார அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போதகொழுப்பு, சர்க்கரை நோயின் அளவை தெரிந்து கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2.12.2012 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே, அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நோய்கள் இருப்பதை போல நினைத்தீர்களே, அந்த பயம் விலகும். அழகு, ஆரோக்யம் கூடும். கேது 6-ல் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

கன்னிப் பெண்களே! தோஷங்களால் தடைபட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை மாதங்களில் நினைத்ததை சாதிப்பீர்கள். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். முகப்பரு, பசியின்மை, ஹார்மோன் கோளாறுகள் வந்து நீங்கும். காய், கனிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

மாணவர்களே! தேர்வின் போது படித்துக் கொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டாதீர்கள். வேற்று மொழிப்பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்விநிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உண்டு.

வியாபாரிகளே! முதலீடுகள் அதிகமிட்டு விழிப்பிதுங்கி நின்றீர்களே, இரவு பகலாக உழைத்தும் லாபம் பார்க்க முடியவில்லையே, கவலை வேண்டாம். இனி அந்த நிலை மாறும். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்ந்துவீர்கள். யாருக்கும் அதிக முன் பணம் தர வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வருட மத்திய பகுதியில் கடையை விரிவுப் படுத்துவீர்கள். சொந்த இடத்திற்கு மாற்றுவீர்கள். தை, மாசி மாதங்களில் திடீர் லாபம் உண்டு. கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், புரோக்கரேஜ், ஷேர் வகைகளால் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். வேற்று மதத்தினர், வெளிநாட்டில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களே! வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவியுயர்வு சித்திரை, வைகாசியிலேயே கிடைக்க வாய்ப்புண்டு. பழைய பிரச்சனைகளை தூர்வாரிக் கொண்டிருக்காமல் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப்பாருங்கள். மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். உங்கள் கை ஓங்கும். குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். கணினி துறையினர்களே! மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டியது வரும். அடிக்கடி விடுமுறை எடுக்காதீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வருட பிற்பகுதியில் அயல்நாட்டு நிறுவனங்கள் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும்.

கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். கிசுகிசுத் தொல்லைகள் நீங்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த கடன் தள்ளுபடியாகும். வற்றிப் போயிருந்த கிணற்றில் நீர் சுரக்கும். மகசூல் இரட்டிப்பாகும். பழுதான பம்பு செட்டை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள்.

இந்த நந்தன வருடம் ஒதுங்கியிருந்த உங்களை முதலிடத்திற்கு அழைத்துச் செல்வதுடன் வசதி வளங்களையும் அள்ளித்தரும்.

பரிகாரம்:
ஸ்ரீமுருகப்பெருமான். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil