Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ருதி வருட‌ப் பலன்கள் : மேஷம்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (20:51 IST)
எடுத்த காரியங்களை விரைந்து முடிக்கும் வல்லமையுள்ளவர்களே! உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் லாப வீட்டில் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக்ரன் ராசிக்குள்ளேயே நிற்பதனால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். 6-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் இழுபறியாக இருந்த பல வேலைகள் இந்தாண்டில் விரைந்து முடியும். விலையுயர்ந்த வாகனங்கள் வாங்குவீர்கள். பங்காளிப் பிரச்சனை தீரும். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனை பைசல் செய்வதற்கு குறைந்த வட்டியில் லோன் கிடைக்கும்.

உங்கள் ராசிநாதனான செவ்வாய் 27.5.2010 வரை நீச்சகதியில் இருப்பதால் அதுவரை உடல் பலவீனமாகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்கள் குறையும். 21.7.2010 முதல் 6.9.2010 வரை செவ்வாய் பாதகாதியான சனியுடன் சேர்வதால் இக்காலகட்டத்தில் சிறு சிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பண இழப்புகள், வீண் பழி வந்துநீங்கும். சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது வரும்.

மூன்றாவது வீட்டில் இந்த வருடம் முழுக்க கேது தொடர்வதால் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சனைகள் தீரும்.வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு.
இந்த வருடம் முழுக்க 9-ம் வீட்டில் ராகு தொடர்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். கருத்துமோதல்கள் வரக்கூடும். பிதுர் வழி சொத்துக்களை பெறுவதில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

14.4.2010 முதல் 1.5.2010 முடிய மற்றும் 7.11.2010 முதல் 20.11.2010 முடிய உள்ள நாட்களில் மட்டும் குருபகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நிற்பார். மற்ற நாட்களில் எல்லாம் 12-ம் வீட்டில் சென்று மறைவதாலும், உங்கள் ராசிக்கு விரைய வீட்டில் இந்தாண்டு பிறப்பதாலும் அனாவசிய செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளாலும் வீண் அலைச்சலும், செலவுகளும் வரும். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்ற சுபச்செலவுகளையும் குருபகவான் தருவார்.

வருடம் பிறக்கும் போது புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். லாபாதிபதி சனி 6-ம் வீட்டில் நிற்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். ஆனி, ஆவணி மாத பிற்பகுதி, புரட்டாசி, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் திடீர் யோகமும், லாபமும் உண்டாகும்.

உத்யோகத்தில் சூழ்ச்சியாலும், மறைமுக எதிரிகளாலும் இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். ஆனி, ஆடி, தை, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.

கலைஞர்களே திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தீர்களே! இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னிப்பெண்களே மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். தள்ளிப் போன கல்யாணம் விரைந்து முடியும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணாக்கர்களே! நீங்கள் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் உயர்கல்வியை தொடருவீர்கள். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கிட்டும்.

இந்த விக்ருதி ஆண்டு புதிய முயற்சிகளில் வெற்றியையும், சொத்துச் சேர்க்கையையும் செல்வாக்கையும் தரும்.

பரிகாரம் :
திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள். வருமானம் உயரும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments