Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ருதி வருட‌ப் பலன்கள் : கடகம்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (20:40 IST)
நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்ட நீங்கள், ஏமாற்றங்களையும், துரோகங்களையும் தாண்டி சாதிப்பவர்கள். உங்களுக்கு ஒன்பதாம் வீட்டில் இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். கடன்பிரச்சனை, நோய், சின்ன சின்ன அவமானங்கள் என்று பலகோணங்களிலும் அலைகழிக்கப்பட்டீர்களே! அதிலிருந்து இனி விடுபடுவீர்கள். 8-ல் மறைந்து கிடக்கும் குருபகவான் 2.5.10 முதல் ராசிக்கு 9-ம் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்தாருடன் மனம்விட்டுப்பேசுவோம் என்று பேசத்தொடங்கி கடைசியில் சண்டை சச்சரவில் போய் முடிந்ததே! இனி பக்குமாகப் பேசுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களுடனும், சகோதரர்களுடனும் மாறி மாறி மனஸ்தாபம் வந்ததே! இனி மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் ஆசைப்பட்டதைக் கூட வாங்கிக் கொடுக்கமுடியாமல் போனதே! இனி விரும்பிய அனைத்தையும் வாங்கிக் கொடுப்பீர்கள்.

ஆவணி, புரட்டாசி, கார்த்திகை மாதங்களில் களையிழந்த வீடு சுபநிகழ்ச்சிகளால் களைகட்டும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கூட வலிய வந்து நட்புபாராட்டுவார்கள். காற்றோட்டமின்றி, இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்தீர்களே! இனி எல்லா வசதிகளும் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள்.

உங்கள் யோகாதிபதி செவ்வாய் 27.5.10 வரை உங்கள் ராசிக்குள்ளேயே நீச்சம்பெற்றிருப்பதால் முன்கோபம் அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. சகோதரவகையில் அலைச்சல் இருக்கும்.
இந்த ஆண்டு முழுக்க 3-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் பிரபலங்கள், தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். ராகு 6-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்டகாலமாக போகாமல் இருந்த குலதெய்வக்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகையின்மையால் சரக்குகள் தேங்கிப் போனதே, இனி புது யுக்தியுடன் அவற்றையெல்லாம் விற்றுத்தீர்ப்பீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நாசூக்காக வசூலிப்பீர்கள். நீசப்பொருட்களான இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள் மூலம் லாபம் வரும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நம்பிக்கைக்குறியவர்களிடம் கடையை விரிவுபடுத்து குறித்து ஆலோசனை செய்வீர்கள். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக இனி வேலையை முடிப்பார்கள்.

உத்யோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி வேலையில் விருப்பம் வரும். மேலதிகாரியுடனான மனஸ்தாபங்கள் விலகும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். ஐப்பசி, மாசி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களை குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி உங்களின் பரந்த மனசை சரியாக புரிந்து கொள்வார்கள்.

கலைஞர்களே, உங்களைப் பற்றி தினந்தோறும் வதந்திகள், கிசுகிசுக்கள் என வந்ததே! இனி நிம்மதியடைவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உண்டு.

கன்னிப்பெண்களே, சக தோழிகளுக்கெல்லாம் கல்யாணம் முடிந்து விட்டதே, நமக்கில்லையே என வெதும்பினீர்களே! இனி கெட்டிமேளச்சத்தம் கேட்கும். வேலையும் கிடைக்கும். மாணாக்கர்களே! மேற்படிப்பைத் தொடர அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். நல்ல நட்புச்சூழல் அமையும்.

இந்த விக்ருதி ஆண்டு வெற்றி மாலையை அணிவிக்கும்.

பரிகாரம் :
காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாமாட்சியம்மனை திங்கள் கிழமை அல்லது பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments