Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ருதி வருட‌ப் பலன்கள் : தனுசு

விக்ருதி வருட‌ப் பலன்கள் : தனுசு
, செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (20:21 IST)
யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்கள். ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்ரனும், புதனும் வலுவாக நிற்கும் போது, இந்த விக்ருதி ஆண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப் பற்றாக்குறை ஓரளவு நீங்கும். குடும்பத்தாரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது பனிப்போர் வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.

பிள்ளைகளை உயர்கல்விக்காக அயல்நாடு அனுப்பி வைப்பீர்கள். மகனுக்கு பல இடங்களில் வரன் பார்த்து அலுத்துப் போனீர்களே! 27.5.10-க்கு பிறகு உங்கள் தகுதிக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றாற்போல நல்ல சம்பந்தம் அமையும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைக்கத்தோன்றும்.

உங்கள் ராசிநாதனான குரு 2.5.10 முதல் 4-ம் வீட்டில் நுழைவதால் வீண் குழப்பம், பதட்டம், காரியத்தடைகள் வரக்கூடும். தாய், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் துரத்தும். பழைய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்ய சித்திரை, வைகாசி மாதங்களில் சில வாய்ப்புகள் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்தக் கடனை போராடித் தீர்ப்பீர்கள்.

ராசிக்குள்ளேயே ராகு நிற்பதால் முன்கோபம் அதிகரிக்கும். ராசிக்கு 7-ம் வீட்டில் கேது தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது சச்சரவுகள், சந்தேகங்கள் வரக்கூடும். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். தங்க நகை, இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள்.

வருடம் முழுக்க ராசிக்கு 10-ம் வீட்டில் சனிபகவான் தொடர்வதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். உறவினர்கள், நண்பர்களின் கல்யாண, கிரகப் பிரவேச வைபவங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு வரும்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை வைகாசி மாதத்தின் பிற்பகுதியில் விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்‌தியோகத்தில் வேலைச் சுமை அதிகமாகும். மேலதிகாரி உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. ஆவணி மாதத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும். புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.

கலைஞர்களே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். அதற்கான பலன் கிட்டும்.

கன்னிப் பெண்களே! உடல் பருமனாகி விடுமென நினைத்து குறைத்து சாப்பிடாதீர்கள். மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். அலைபாய்ந்த உங்கள் மனசு இனி அமைதியடையும். விடுபட்ட கல்வியை தொடருவீர்கள். வருட மையப்பகுதியில் புது வேலை கிடைக்கும். கல்யாணமும் நடக்கும்.
மாணாக்கர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். புகழ்பெற்ற கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்த தமிழ்‌ப் புத்தாண்டு எதிலும் மூன்றாவது முயற்சியில் உங்களை வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் :
கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை அல்லது உத்திரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். கால் இழந்தவர்களுக்கு உதவுங்கள். அமைதி கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil