Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கடகம்

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கடகம்
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:09 IST)
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று விரும்பும் நீங்கள் பகிர்ந்து உண்பதில் சந்தோஷமடைவீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சென்று மறைகிறார். 'இன்யெட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்' என்று சில பழைய நூல்கள் கூறுகின்றன. 8-ம் வீட்டில் குரு வந்தால் ஏகப்பட்ட செலவுகளும், நஷ்டங்களும் எந்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமலும் போகும் என்று வருந்தாதீர்கள். சர வீடான கடக ராசியில் பிறந்த உங்களுக்கு குருபகவான் ஸ்திர வீட்டில் மறைவதால் கெடு பலன்கள் குறையும்.

அதோடுமட்டுமல்லாமல் 4.5.2010 முதல் 14.7.2010 வரை அதிசாரமாகவும், 15.7.2010 முதல் 6.11.2010 வரை வக்ரமாகவும் உங்கள் யோக வீடான 9-ம் வீட்டிற்கு குரு செல்வதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். அரைகுறையாக நின்று போன வேலைகளையெல்லாம் இனி விரைந்து முடிப்பீர்கள். வி.ஐ.பி.களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிரச்னைக்குரிய சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள்.

குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கல்யாணம், காதுகுத்து என்று வீடு கலைகட்டும். மனைவி வழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீர்ந்து நல்லது நடக்கும். பணம் வந்தாலும் தங்கவில்லையே என புலம்பினீர்களே! இனி சேமிக்கும் அளவிற்கு பணம் வரும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குரு 4-ம் வீட்டை பார்ப்பதால் பல சிந்தனைகளுடன் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். சோம்பல், அசதி நீங்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும். புது வண்டி வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் பூர்வ புண்யாதிபதி மற்றும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் திருப்பம் ஏற்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கையிலிருக்கும் காசுடன் கொஞ்சம் கடன் வாங்கி நிலம், வீடு வாங்குவீர்கள். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். இருந்தாலும் குரு பகவான் 8-ம் வீட்டில் நிற்பதால் உறவினர்களுடன் மனக்கசப்பு வரும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வெளிநாட்டு பயணங்கள் அமையும். பணம் வந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெகுநாட்களாக வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புது வேலை அமையும். தந்தைக்கு இருந்த நோய் விலகும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் அரசு காரியங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி கிடைக்கும். டிரஸ்டில் பதவிகள் தேடி வரும்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதுடன் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் மகளுக்கு திருமணம் முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாள் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உங்களின் சப்தம அட்டமாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். இக்காலக்கட்டத்தில் குருபகவான் 9-ம் வீட்டிற்கு செல்வதால் தடைப்பட்ட திருமணம் முடியும்.

வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மே, ஜூன் மாதங்களில் எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். ஃபைனான்ஸ், ஷேர் மார்க்கெட் வகையில் பணம் வரும்.

உத்யோகத்தில் காலநேரம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான பலனையும், பாராட்டையும் வேறொருவர் தட்டிச் சென்றாரே! இனி பதவி உயரும். சம்பளமும் கூடி வரும். மே மாதம் முதல் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் மறையும். ஒப்பந்த அடிப்படையிலான வேலையில் சேர்வதற்கு முன் அதற்குரிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துப் பார்த்து பின்னர் கையெழுத்திடுவது நல்லது.

கன்னிப் பெண்களே! உற்சாகம் இல்லாமல் சோர்ந்திருந்தீர்களே! இனி மகிழ்ச்சி தங்கும். காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு மேற்கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஹார்மோன் பிரச்சனை, பசியின்மை நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். திருமணம் நல்ல விதத்தில் முடியும்.

மாணவர்களே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். அதிக மதிப்பெண் எடுப்பீர்கள்.

கலைஞர்களே! ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை இனி இருக்காது. நவீன யுக்தியால் மகசூல் பெருகும். ஊரில் பெரிய பதவிகள் தேடி வரும்.

அரசியவாதிகளே! அறிக்கைகளாக விட்டுக் கொண்டிருக்காமல் மக்களுக்கு பயன்படும் படியான புதுத் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

இந்த குருப்பெயர்ச்சி மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றியையும், வாழ்வில் ஒருபடி முன்னேற்றத்தையும், அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil