Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : துலாம்

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : துலாம்
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (19:01 IST)
தன்னை மதியாதவர்களுக்கு மறுக்காமல் உதவும் மனசு கொண்ட நீங்கள்,கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் அடியெடுத்து வைக்கிறார். இனி அள்ளிக் கொடுப்பதுடன், வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தையும் அமைத்துத் தருவார்.

ஒரே வீட்டுக்குள் ஒட்டுறவு இல்லாமல் பிரிந்துதானே இருந்தீர்கள். அந்த அவல நிலை மாறும். வீட்டில் அமைதி நிலவும். பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவித்த தம்பதியருக்கு கண்ணுக்கழகான குழந்தை பிறக்கும். படுத்த படுக்கையாய் இருந்த தாய் எழுந்து நடப்பார். கல்யாண நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்பட்டீர்களே! இனி முதல் மரியாதை கிடைக்கும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

குலதெய்வ‌க் கோவிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். குரு உங்கள் ராசியை பார்ப்பதால் சோகம் சூழ்ந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். குரு ஐந்தாம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். தந்தையுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பதினோறாவது வீட்டை குரு பார்ப்பதால் உங்களை குறை கூறியவர்களெல்லாம் இனி உங்களை புகழ்ந்து பேசுவார்கள். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சொந்த ஊரிலுள்ள கோயிலை புதுப்பித்து ஊரே வியக்கும்படி கும்பாபிஷேகம் நடத்துவீர்கள்.

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் காரியங்கள் விரைந்து முடியும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை வாங்கித் தருவீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டிற்கு வேண்டிய டி.வி, ஃப்ரிஜ் புதுசு வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் தன சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மதிப்பார்கள்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் பணவரவு, எடுத்த காரியங்களில் வெற்றி, சொத்து சேர்க்கை, புதிய வாகன வரவு ஆகியன உண்டாகும். பெரிய பதவிகள் தேடி வரும். வேலைக் கிடைக்கும்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் சேவக ரோகாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிப்பீர்கள்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைவதால் செலவுகள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு தேடி வரும். பயணங்களில் கவனம் தேவை. சிக்கனமாக இருக்கப்பாருங்கள்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலக்கட்டத்தில் குரு பகவான் 6-ல் மறைவதால் அலைச்சலை உண்டாக்குவார். என்றாலும் உங்களின் சுகாதிபதியும், பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வீடு கட்டுவது, வாங்குவது லாபகரமாக முடியும். இருந்தாலும் வயிற்று வலி, தூக்கமின்மை வந்து நீங்கும்.

வியாபாரத்தில் புதிது புதிதாக வந்த போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள், முதலீடுகள் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

உத்யோகத்தில் உங்களை வெறுத்த மூத்த அதிகாரியின் மனசு மாறும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். வேலைச்சுமை குறையும். ஏப்ரல், ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் நல்ல சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே! என்று வருந்தினீர்களே! இனி சிறப்பாக நடக்கும். நல்ல வேலையும் கிடைக்கும். தோல்வியுற்ற பாடத்தில் வெற்றி பெறுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கலைஞர்களே! உங்கள் படைப்புக்கு நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.

விவசாயிகளே! தண்ணீர் வசதிப் பெருகும். டிராக்டர் வாங்குவீர்கள். கரும்பு, தென்னை, தேக்கால் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! அவசரப்பட்டு அணி மாற வேண்டாம். பெரிய பதவிகள் கிடைக்கும்.

ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி கவலையில் மூழ்கிக் கிடந்த உங்களை கலகலப்பாக்குவதுடன் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை தருவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil