Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : விருச்சிகம்

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : விருச்சிகம்
, வெள்ளி, 11 டிசம்பர் 2009 (18:58 IST)
எதார்த்தமான பேச்சால் எதையும் சாதிக்கும் நீங்கள், பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து உடனடி தீர்வு காண்பதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்குரிய குரு பகவான் தன் நட்சத்திரமுள்ள வீட்டில் அமர்வதால் கெடுபலன்கள் குறையும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் இருக்கும்.

வரவுக்கு மிஞ்சிய செலவும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் முற்றும். ஆகையால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நெடுந்தூர, இரவுநேரப் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். வாகன விபத்துகள் வரக்கூடும். சொந்தம் பந்தங்களிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள்.

ஆனால் உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் அதிசாரம் மற்றும் வக்ர கதியில் 4.5.2010 முதல் 6.11.2010 முடிய பூர்வ புண்ய வீடான 5-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் அக்கால கட்டங்களில் எதிலும் வெற்றியுண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடிவடையும். பணத்தட்டுபாடு நீங்கும். குழந்தை பாக்யம் இல்லையென்று வாடி வதங்கிய தம்பதியருக்கு அழகான வாரிசு உருவாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வழக்குகள் சாதகமாகும்.

மகளுக்கு கல்யாணம் எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பாடாகும். மகனுக்கு இருந்த கூடா‌ப்பழக்க வழக்கங்கள் நீங்கும். உங்கள் மனைவி, மக்களைப் பற்றி, உறவினர்கள், நண்பர்கள் தவறாகச் சொன்னால் அதை நம்பி அவர்களை தண்டிக்காதீர்கள். உங்களின் கோபதாபங்களை, கூடாபழக்க வழக்கங்களை உங்கள் மனைவி சில நேரங்களில் சுட்டிக் காட்டுவார். அதற்காக வருத்தப்படாதீர்கள். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்ளின் உடல்நலத்தில் கவனம் தேவை.

உயர்கல்வி-உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. நேரந்தவறி சாப்பிடுவதை தவிர்க்கவும். சொத்து வாங்குவது விற்பதில் உஷாராக இருங்கள். சினேகிதர்களால் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். எந்தப் பிரச்சனைக்காவும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக்கொள்ளப் பாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்:

15.12.2009 முதல் 18.1.2010 முடிய உங்களின் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஓரளவு நிம்மதி கிடைக்கும். புதிய முயற்சிகள் அலைச்சலின் பேரில் வெற்றியடையும். சகோதரர்கள் உதவுவார்கள். பயணங்கள் அதிகரிக்கும். உங்களைப் பற்றி வீண் பழி வந்து நீங்கும்.

19.1.2010 முதல் 17.3.2010 முடிய ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். கண், நெஞ்சு வலி வந்து நீங்கும். சிறுசிறு வாகன விபத்துகள் நிகழக்கூடும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

18.3.2010 முதல் 3.5.2010 வரை மற்றும் 7.11.2010 முதல் 21.11.2010 முடிய உங்களின் தன பூர்வப் புண்யாதிபதியான குருபகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் சென்றாலும் குரு பகவான் 4-ம் வீட்டில் நிற்பதால் நல்லதும், கெட்டதும் கலந்து நடக்கும். சிறுசிறு ஏமாற்றங்களை சந்திப்பீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். தாயாருடன் கருத்து மோதல் வரும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். கௌரப் பதவிகள் தேடி வரும். தகுந்த ஏற்பாடின்றி வீடு கட்டும் பணியில் இறங்க வேண்டாம்.

4.5.2010 முதல் 21.5.2010 வரை மற்றும் 28.9.2010 முதல் 6.11.2010 முடிய உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் தனது பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதுடன் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் திடீர் பணவரவு, சொத்து சேர்க்கை, குழந்தை பாக்‌கியம், அதிகாரப் பதவி அமையும். வாகனம் வாங்குவீர்கள். கல்யாணம், கிரகபிரவேசமென வீடு கலைக் கட்டும். வேலைக் கிடைக்கும்.

22.5.2010 முதல் 27.9.2010 முடிய உள்ள காலக்கட்டத்தில் குரு பகவான் உங்களின் சேவக, சுகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்து வரும். முதுகு வலி, வயிற்று வலி நீங்கும். வேற்றுமொழியினர் உதவுவார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் என அவ்வப்போது முயற்சி செய்தும் தடங்கல் வந்ததே! மே, ஜூன்,செப்டம்பர் மாதங்களில் உங்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வேலையாட்களிடம் உங்கள் கோபத்தைக் காட்டிக் கொண்டிக்க வேண்டாம். அவர்களிடம் சரக்கு வாங்குமிடத்தைப் பற்றி சொல்வதை தவிர்க்கவும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். மருந்து, மரம், ஸ்டேஷ்னரி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

உத்‌தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியுடன் பனிப்போர் வந்து நீங்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. குருபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் சவால்களை சமாளிக்கும் மன தைரியம் கிடைக்கும். மே, ஜூன்,செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் புது வேலைக் கிடைக்கும். பதவி சம்பளம் உயரும். சக ஊழியர்களிடமும் சுமுகமான உறவு ஏற்படும்.

கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களின் சகவாசங்களை ஒதுக்கித்தள்ளுங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த பெரிய முடிவும் எடுக்க வேண்டாம். கல்யாணம் தாமதமாக முடியும்.

மாணவ-மாணவிகளே! விளையாட்டில் செலுத்தும் கவனத்தை கொஞ்சம் படிப்பில் காட்டுங்கள். கணிதம், வேதியியல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

கலைஞர்களே! எதிர்பார்த்த புது வாய்ப்புகள் தடைபட்டு வரும். சக கலைஞர்களை அனுசரித்துப் போங்கள்.

விவசாயிகளே! முதல் போகம் நஷ்டமடைந்தாலும் ரெண்டாம் போகத்தில் அதிக லாபம் வரும்.

அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

இந்த குரு மாற்றம் உங்களை சில நேரங்களில் சிரமப்படுத்தினாலும், மே மாதம் முதல் எதிலும் வெற்றியையும், திடீர் யோகத்தையும் தருவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil