தமிழ்.வெப்துனியா.காம்: உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். நெல்லையில் ஒரு காவல் துணை ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்படுகிறார். அவர் சாலையில் அரைகுறை உயிரோடு இருந்து யாரும் காப்பாற்றப்படாமல் இறந்து போய்விடுகிறார். ஆனால், கொலைகாரர்கள் குறிவைத்தது வேறு ஒரு காவல் துணை ஆய்வாளரை, ஆள்மாறாட்டம் காரணம் இவரை வெட்டிவிட்டார்கள் என்று சொன்னார்கள். அது செய்தியாகவும் வந்தது. உறுதியும் செய்யப்பட்டது. நம்முடைய கேள்வி என்னவென்றால், இப்படி ஏன் நடக்கிறது.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இதற்கெல்லாம் தசா புத்திதான் காரணம். துர்மரணம், விபத்து, ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறத்தல் போன்றெல்லாம் ஜோதிடத்தில் தனி அதிகாரமாகவே சொல்லப்பட்டுள்ளது. ஜாதக அலங்காரம், நந்தி வாக்கியம், விவேஷத சதகம் போன்றவற்றில் சில அதிகாரங்களே கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது என்னென்ன கிரக அமைப்புகள் இருந்தால் மரணம் எப்படி எப்படியெல்லாம் சம்பவிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆள் மாறாட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறக்கக்கூடிய ஜாதகமாக அது இருக்கும்.
ஏனென்றால் லக்னாதிபதி 6க்கு உரியவனுடன் சேர்ந்து, லக்னாபதி சனி, செவ்வாயால் பார்க்கப்பட்டு 6க்குரிய நிலையும் சேர்ந்திருந்தால் அந்த தசா புத்தி காலங்களில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது.