கேள்வி: ஐ.பி.எல்.லில் ஏற்பட்டிருக்கக் கூடிய நிதி மோசடி, சூதாட்டம், சூறாவளி எல்லாவற்றையும் கேட்டிருப்பீர்கள். இந்த மாதிரியான ஒரு விஷயம் ஏன் நடக்கிறது. இதற்கு, நிச்சயமாக இன்வெஸ்ட் செய்திருப்பவர்களின் பேராசைதான் காரணம் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு கிரக ரீதியாக ஏதாவது சொல்ல முடியுமா? கற்பிக்க முடியுமா?
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன்:
விளையாட்டு கிரகம் என்பதே புதன்தான். இந்த விளையாட்டு கிரகம் நன்றாக இருந்தால்தான் ஒரு வீரர் தேசிய அளவில் அணியிலேயே பங்கேற்க முடியும். அப்படி இல்லையென்றால் எக்காரணம் கொண்டும் அவரால் பங்கேற்க முடியாது.
இப்பொழுது விளையாட்டுக்குரிய கிரகம் புதன் வக்கிரமாகிக் கிடக்கிறார். அதுமட்டுமல்லாமல், 12ஆம் தேதியிலிருந்து அந்த வக்கிரம், அதாவது 12 என்றால் ஏப்ரல் 25ஆம் தேதியிலிருந்து மிக அதிகமாகிறது. இப்படி வக்கிரமாகும் பொழுது படுமோசமாக ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பலர் கைது செய்யப்படுதல், மோசடிகள் கண்டுபிடிப்பு, சில விளையாட்டு வீரர்கள் இனிமேல் எந்த ஐ.பி.எல். போட்டியிலும் பங்கேற்பதில்லை என்கின்ற முடிவிற்கு வருதல், இந்த மாதிரியானதெல்லாம் இனிமேல் உருவாகும்.
ஏனென்றால் கடந்த ஒன்றரை மாதமாக தொடர்ந்து புதன் பலவீனமாக இருக்கிறார். அதாவது பகை நட்சத்திரத்தில் போவது, பகை வீட்டில் உட்கார்ந்திருப்பது. இப்பொழுது செவ்வாயுடைய வீட்டில்தான் உட்கார்ந்திருக்கிறார். அடுத்து அவர் 25ஆம் தேதியிலிருந்து மீனத்திற்கு வருகிறார். அது அவருடைய பலவீனமான வீடு. அப்பொழுது சனியோட பார்வைக்கு வந்து உட்காருகிறார். அப்படி இருக்கும் பொழுது விளையாட்டு இனிமேல் வினயமாகும்.
அதன் மூலமாக கோடி கோடியாக சம்பாதிப்பவர்களுக்கு பாதகம் உண்டாகும். இனிமேல் அவ்வாறு சம்பாதிக்க முடியாது. ஐ.பி.எல். போட்டிகள் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்பு கூட இருக்கிறது. இனிமேல் இங்கு நடத்தக்கூடாது என்பதற்கான வாய்ப்பும் உண்டு. கிரிக்கெட் சங்கம், அமைப்பு இதில் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவிகள், அதில் கடும் போட்டிகள், ஏற்கனவே அந்தப் பதவிகளில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுதல். இந்த மாதிரியான நிலைமையும் உண்டாகும்.