கோயிலில் அர்ச்சகருக்கு பணம் கொடுப்பது அவசியமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
அர்ச்சகருக்கு பணம் தரும் விடயத்தை, கோயிலுக்கு வரும் பக்தர்களுடைய மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பார்க்க வேண்டும்.
இறைவனுக்கு தொண்டு செய்வதே அர்ச்சகர்களின் கடமை என்றாலும், அவர்களுக்கு பக்தர்கள் காணிக்கை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆனால், சில கோயில்களுக்குள் நுழைந்தவுடன் மனதிற்கு நிறைவளிக்கும் வகையில் அவை சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல் மந்திரங்களை உச்சரிப்பதிலும் அந்த கோயில் அர்ச்சகர்/குருக்களின் தனித்துவம் வெளிப்படும்போது, நமது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். சுவாமிகளை சிறப்பாக அலங்காரம் செய்தன் மூலமும் சில அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவர்.
இவற்றையெல்லாம் செய்யும் குருக்களுக்கு மனமுவந்து காணிக்கை/பணம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் கட்டாயப்படுத்தி காசு வாங்கும் இடத்தில் காணிக்கை அளிப்பதும், அளிக்காததும் அவரவர் மனநிலையைப் பொறுத்தது.