இலங்கையில் போர் குறையும் எனக் கூறியிருந்தீர்கள். நேர்மாறாக நடந்து வருகிறதே?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:இலங்கையைப் பொருத்த வரை அந்த நாடும் விருச்சிக ராசியில் வருகிறது. அதனை ஆள்பவரும் விருச்சிக ராசியில் வருகிறார். உரிமைக்காக போராடி வருபவரும் விருச்சிக ராசிக்காரர். விருச்சிகத்திற்கு உரிய கிரகம் செவ்வாய். செவ்வாய் போர் கிரகம் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் கும்பத்தில் இருந்த செவ்வாய் தற்போது மீனத்திற்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். செவ்வாய் ஒவ்வொரு முறை பெயர்ச்சியாகும் போதும் இலங்கையில் ஒவ்வொரு விதமான நடவடிக்கைகள் நிகழ்கின்றன. இதனை ஆய்வுக்கு உட்படுத்தியும் நாம் பார்த்து வருகிறோம்.மீனம் நீர் ராசி என்பதால் போர் நடவடிக்கைகள் குறையும் எனக் கூறியிருந்தோம். ஆனால் அதற்கு நேர்மாறாக இலங்கையில் போர் அதிகரித்துள்ளது. மே 22ஆம் தேதி செவ்வாய் ஆட்சி பெறப் போகிறது. அப்போது போரின் தீவிரம் குறையவோ அல்லது நிறுத்தப்படவோ வாய்ப்புகள் ஏற்படும். பொதுவாக செவ்வாய் மீனத்தில் அமரும் போது போரின் தன்மை குறைவதையே இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது மீனத்தில் செவ்வாயுடன், சுக்கிரனும் அமர்ந்துள்ளதால் போரின் தீவிரம் அதிகரித்திருக்கலாம். செவ்வாய் ஆட்சி பெற்று தனித்து இருக்கும் போது போரின் தீவிரம் குறையலாம். ஆனால் இந்த அமைப்பு 4 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். இதன் பின்னர் மீண்டும் செவ்வாய் உடன் சுக்கிரன் இணைந்துவிடும் என்பதால், பெண்கள், குழந்தைகள் அதிகளவில் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு உரிய கிரகம் சுக்கிரன் என்பதால் இதனைக் கூறுகிறேன். இலங்கை, ஆட்சியாளர் அல்லது போராளிகளின் தலைவர் இவர்களின் ஒருவரது ராசி விருச்சிகமாக இல்லாதிருந்தால் இத்தனை உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது. ஆனால் துரதிருஷ்டவசமாக அனைவரும் ஒரே ராசியில் வருவதால் இந்த பேரவலம் தவிர்க்க முடியாததாகி விட்டது.