தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில், அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவின் படி, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் வெறியாட்டங்களை கண்டித்தும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் நாளை, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் ஆளும் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் இந்த போராட்டத்தில் பங்கு பெறுவதால் அவைகள் நாளை மூடப்பட்டிருக்கும்.
அதேபோல், இந்த போராட்டத்திற்கு ஆம்னி பேருந்துகள் சங்கம், லாரி சங்கம் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து கோவையில் ஆட்டோ சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னையில், அதிமுக தொழிற்சங்கம் தவிர மற்ற ஆட்டோ சங்கத்தினரும் இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், மொத்தம் 2.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகள், அலுவலகங்கள் வங்கிகள் மற்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.