தேர்தலில், திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமாக, 20 மாவட்ட நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், 89 இடங்களில் மட்டுமே திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கு, கட்சிக்குள் நடந்த உள்குத்து வேலைகள்தான் காரணம் என்றும் தோல்வி அடைந்தவர்கள் தலைமைக்கு கண்ணீர் கடிதம் எழுதினர். நேரிலும் வந்து கருணாநிதியிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால், திமுக வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, தோல்வி அடையச் செய்த நிர்வாகிகளை திமுக தலைமை களையெடுத்து வருகிறது.
இதன் முதல்கட்டமாக, நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.கி.துரைராஜ், கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.வீரகோபால், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செ.காந்தி செல்வன் ஆகியோர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதே போல, திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமாக இருந்த, மேலும், 20 மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை அதிரடி முடிவு செய்துள்ளது. இதற்கான லிஸ்ட் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து உள்குத்து வில்லன்கள் அலறிப் போய் உள்ளனர்.