கூடங்குளம் அணுஉலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதைத் தொடர்ந்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 3 பேரை படகில் ஏற்றி மக்கள் அனுப்பி வைத்தனர்.
கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பப்படுவதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் நேற்று அணுஉலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறை தடுத்ததால் கடற்கரையிலேயே விடிய விடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணுஉலையை முற்றுகையிட சென்றனர். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவலர்களுக்கும்- பொதுமக்களும் இடையே கடும் சண்டை நடந்தது.
காவலர்கள் லத்தியால் அடிக்க, பொதுமக்கள் அவர்களை மண்ணை அள்ளி வீசினர். இதில் போராட்டக்காரர்கள் பலர் காயம் அடைந்தனர். சில காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இதனிடையே காவல்துறையினரின் தடியடிக்கு பயந்து பொதுமக்கள் கடலுக்குள் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுதாஸ் ஆகியோரை பைபர் படகில் தப்பவைத்தனர்.
அவர்களை பிடிக்க காவல்துறை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தடியடி நிறுத்தப்பட்டது. இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.