சுண்டைக்காய் நாடான இலங்கை, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது என்றும் இதைவிட இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை என்றும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவை மீட்கவோ, கடலோர மீனவர்களின் ரத்தக் கண்ணீரைத் துடைக்கவோ திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் வழி காணப்படவில்லை. ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் சோகக் கதையாக உள்ளது. மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமருக்கும் கடிதங்கள் எழுதியும் இன்றுவரை பலனில்லை.
தமிழ்நாடு தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து அண்மையில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணித்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் அவரவர் இயல்புக்கும், அவரவர் சக்திக்கும் ஏற்றவாறு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்துள்ளனர்.
ஆனால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் காதில் விழுந்ததாகவோ, அந்தப் பிரச்சனை பற்றிப் பேசவோ மத்திய அரசு முன்வரவில்லை. சுண்டைக்காய் நாடான இலங்கை இப்போது கூட, இந்தியா கேட்ட ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் சீனாவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதைவிட இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான தோல்வி எதுவும் இல்லை.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண, தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் கட்சி பாகுபாடின்றி ஒரு குழுவாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும். மீனவர் நிலைமையை பிரதமரிடம் விளக்கி தீர்வு காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.