நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்து கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்கரைப்பேட்டையை சேர்ந்த பாலு, செல்லத்துரை, சஞ்சய், ஜெயபால், பன்னீர் உள்பட 9 பேர் கடந்த சனிக்கிழமை விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். நாளை கரை திரும்ப ஆயத்தமான மீனவர்கள் கடைசியாக கோடிக்கரை அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதிக்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் அச்சம் அடைந்த மீனவர்கள், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், 9 பேரையும் பிடித்து சென்று முகாமில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கிருந்த ஒரு மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். அப்போதுதான், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டது அக்கரைப்பேட்டை மீனவர்களுக்கு தெரியவந்தது.
உடனடியாக தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்மாறு அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 9 மீனவர்களை பிடித்து சென்றுள்ள நிகழ்வு நாகை மாவட்ட மீனவ பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இலங்கை கடற்படையினரின் அட்டூயங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அடங்கி இருந்த நிலையில் மீண்டும் தங்கள் அட்டூழியத்தை காட்டத் தொடங்கியுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.