தென் மாவட்டங்களில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தற்போது சென்னையிலும் பரவியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு மூன்று பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை பயமுறுத்தி வந்த பன்றிக் காய்ச்சல் நோய் அடங்குவதற்குள் தற்போது டெங்கு காய்ச்சல் நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் முதலில் பரவிய டெங்கு காய்ச்சல், அம்பை, சிங்கை, ஆலங்குளம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நோய்க்கு நெல்லை மாவட்டத்தில் இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 பேர் இறந்துள்ளனர். 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விருதுநகர், மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தற்போது கரூர், கோவை மாவட்டங்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை அரசு மருத்துவமனையில் 3 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே டெங்கு காய்ச்சல் சென்னையிலும் பரவியுள்ளது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காயச்சல் பாதிக்கப்பட்ட 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழும்பூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவரும், அயனாவரம் சோமசுந்தரம் 6-வது தெருவைச் சேர்ந்த சங்கர் என்ற வாலிபரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வழக்கமாக டெங்கு நோய் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் படிப்படியாக குறையும். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே பரவத் தொடங்கி விட்டது. இதற்கு பருவகால மாற்றம் ஒரு முக்கிய காரணமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.