''கூடங்குளம் போராட்டக் குழுவினருக்குத் துணையாக தமிழகம் திரண்டெழ வேண்டும்'' என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் குறிப்பிட்டபடி நிறைவேற்றப்படும் என பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமரின் இந்தப் போக்கு மக்களின் உணர்வுகளையும் தமிழக அரசின் வேண்டுகோளையும் மதிக்காதப் போக்காகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத் தூதுக்குழுவினர் பிரதமரைச் சந்தித்தபோது அணுமின் நிலைய திட்டம் குறித்து நிபுணர்குழு ஒன்றை அமைப்பதாக பிரதமர் அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
மக்களின் அச்சம் போக்கப்படும் வரை திட்ட வேலைகள் நிறுத்தி வைக்குமாறு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தையும் பிரதமர் அலட்சியம் செய்திருக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 925 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் இத்திட்டத்தை கைவிட்டால் தமிழகத்தின் வளர்ச்சி மட்டுமின்றி தொழில்மயமாக்கத் திட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரதமர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.
1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஒகேனக்கல் புனல் மின் திட்டம் அமைக்க கடந்த 50 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழக அரசுக்கு அனுமதி தர மத்திய அரசு மறுத்து வருகிறது. கர்நாடகத்தின் எதிர்ப்பே இதற்குக் காரணமாகக் காட்டுகிறது.
தமிழக அமைச்சரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை மதித்து நடக்கும்படி பிரதமரை முதலமைச்சர் வற்புறுத்த வேண்டும்.
அணுமின் நிலைய கட்டுமானப் பணிகளுக்கு செல்வோரை அறவழியில் தடுக்க போராட்டக் குழுவினருக்கு சட்டப்படி உரிமை உண்டு. இதில் காவல்துறை தலையிடாமல் இருந்தாலே போதும் வேலைகள் தானாக நின்றுவிடும்.
பிற தென்மாநிலங்கள் அணுமின் நிலையத்தை தங்கள் மாநிலத்தில் அமைப்பதற்கு மறுத்துவிட்ட நிலையில் தமிழகத்தில் அதை அமைத்து உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு பங்கிட்டுக் கொடுக்க மத்திய அரசு வகுத்துள்ளத் திட்டம் தமிழர்களை ஏமாளிகளாக்கும் திட்டமாகும்.
மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு அபாயம் நேருமானால் அது தமிழ்நாட்டுக்கு என்ற நிலையை எதிர்த்து தமிழக மக்கள் அணி திரண்டு போராடவும் கூடங்குளம் மக்களுக்கு தோள்கொடுத்து துணை நிற்கவும் முன்வர வேண்டும் என்று பழ.நெடுமாறன் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.