பேருந்து விபத்தில் பலியான 22 பேரின் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அருகில் நடுநிசி வேளையில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பயணிகள் பலர் தீயில் கருகி துடிதுடித்து மாண்டனர் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும் துக்கமும் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகமாக சாலை விபத்துகள் நாள்தோறும் நடப்பதும் பலர் உயிர் இழப்பதும் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சாலைகளில் வாகனங்களைக் கண்மண் தெரியாத வேகத்தில் ஒட்டுவதும் இன்னும் பல்வேறு காரணங்களினாலும் கோரமான விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனைத் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். விபத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுகிறவர்கள் பூரண நலமடைய விழைகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.