ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்துகின்ற கழிவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவுபடி நிபுணர் குழு இன்று ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பங்கேற்றுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மூட இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன், மாத்தூர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நேரில் ஆஜராகி வாதாடி வைகோ, ஸ்டெர்லைட் நச்சு ஆலையின் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், நச்சு ஆலையில் இருந்து வெளியேறும் நீரைக் குடிக்கின்ற ஆடு, மாடுகள் மரணடைவது அன்றாட நிகழ்வாகி விட்டது என்றும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலையில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்துகின்ற கழிவுகள் குறித்து நீரி (NEERI) நிறுவனம் ஆய்வு நடத்தி முழுமையான அறிக்கையை 8 வார காலத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
இந்த உத்தரவின்படி நீரி நிறுவன அதிகாரிகள், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின்போது ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆய்வு நாளையும் தொடர்ந்து நடக்கிறது.