இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு உள்ளது கருணாநிதியின் குடும்ப சொத்துக்கள்: ஜெயலலிதா குற்றச்சாற்று
, சனி, 29 ஜனவரி 2011 (15:50 IST)
''
இந்தியாவிற்கே கடன் கொடுக்கும் அளவுக்கு கருணாநிதி குடும்பத்தினர் சொத்துக்களை உலக அளவில் வாங்கி குவித்துள்ளனர்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:'
அரைத்த மாவையே அரைத்தது போல’ என்ற பழமொழிக்கேற்ப சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்கிறார் கருணாநிதி. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், பத்தாயிரம் பேருக்கு மேல் நிற்க முடியாத ஓர் அரங்கத்தில், லட்சோப லட்சம் மக்கள் கூடியிருக்கிறீர்கள் என்று ஒருவர் குறிப்பிட்டதாகவும், இப்படித்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையிலும் லட்சம், ஆயிரம், கோடி ஊழல் என்று உத்தேசமாக எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.ஊழலே நடக்கவில்லை என்று முதலில் கூறிய கருணாநிதி, தன்னுடைய இந்த அறிக்கையின் மூலம் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து இருக்கிறது என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பே இல்லை என்று கபில் சிபல் திட்டவட்டமாக கூறியதை குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. இவ்வாறு கூறியதற்காக கபில் சிபல் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்!மூன்றாவதாக, தொலைத்தொடர்புத் துறையிலே மக்களுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்று கருதி தான் முதலில் வருபவருக்கு முதலில் வழங்குவது என்ற அடிப்படையை ராசா பின்பற்றியது போல கூறி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.ஸ்வான் டெலிகாம், யுனிடெக், லூப் டெலிகாம், அலையன்ஸ் இன்ப்ரா போன்ற தகுதியில்லாத கம்பெனிகள் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ராசாவின் தயவால் பெற்றன. உரிமங்களை பெற்ற நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை சில நாட்களுக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன.
உதாரணமாக 1,650 கோடி ரூபாய் கொடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பெற்ற யுனிடெக் நிறுவனம், ஒரு சில நாட்களிலேயே தனது 60 விழுக்காடு பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலினார் நிறுவனத்திற்கு 6,120 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறது. இதே போன்று ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன்னுடைய 45 விழுக்காடு பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்திற்கு 4,500 கோடி ரூபாய்க்கு விற்று இருக்கிறது. மேற்படி லெட்டர் பேடு கம்பெனிகள் அடைந்த லாபத்தை மக்களுக்கு கிடைத்த சலுகை என்கிறாரா கருணாநிதி?
ராசாவால் பயனடைந்த பெரும்பாலான நிறுவனங்கள் இன்னமும் சேவையை தொடங்கவே இல்லை. இப்படி இருக்கும்போது மக்களுக்கு என்ன சலுகை கிடைத்து இருக்கும் என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், “முதலில் வருபவருக்கு முதலில் வழங்குவது” என்ற கொள்கையைக் கூட ராசா கடைபிடிக்கவில்லை. இந்தக் கொள்கையை முறையாக ராசா கடைபிடித்து இருந்தால், 2006 முதல் 2008 வரை பெற்ற விண்ணப்பங்களை முதலில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், தான் சார்ந்த கட்சியின் தலைவரையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் குளிர வைப்பதற்காக, உரிமம் வாங்குவதற்குரிய தகுதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “முதலில் தந்தவருக்கு முதலில் வழங்குவது” என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை விற்று இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு கருவூலத்திற்கு வரவேண்டிய வருவாயை கருணாநிதி குடும்ப கருவூலத்திற்கு திருப்பிவிட்டு இருக்கிறார்.
ராசாவின் தவறான கொள்கை காரணமாக பயனடைந்தவர்கள் பொதுமக்கள் அல்ல; கருணாநிதியின் குடும்ப மக்கள் தான். “மக்கள் நல அரசு என்கிற போது அந்த அரசு வணிக நோக்கத்தோடு, லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெறாது; சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு அரசு நடைபெற வேண்டுமே தவிர, நிதி இழப்பு - மிச்சம் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நடைபெறுவது நல்லதல்ல” என்று கருணாநிதி கூறி இருக்கிறார்.
அரசு வணிக நோக்கோடு, லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்படும் போது, அதன் மூலம் அரசுக்கு வரும் பணம் பொதுமக்களுக்காக, அதாவது சமூக நன்மைக்காக பயன்படும். கருணாநிதி சொல்வது போல் ஒரு அரசு செயல்பட்டால், ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் பயனடையும். ‘தன்’ சமூகத்தை மனதில் வைத்து கருணாநிதி இது போன்ற கருத்தைத் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கருணாநிதி சொல்வது போல் மத்திய அரசு செயல்பட்டதன் காரணமாக இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்தபடியாக, கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், தொடக்கத்தில் செல்போன்களை ஒருவர் பயன்படுத்தினால் அழைப்பவர் 16 ரூபாய் கட்ட வேண்டும், அழைக்கப்பட்டவர் 8 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இப்போது ஒரு நிமிடம் பேசினால் 40 காசு, 30 காசு என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறி இருக்கிறார்.