முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள், லாரிகள் எல்லைப் பகுதியான ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஓசூர் அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில் அதிகாலை முதலே கர்நாடகாவிற்கு செல்ல இருந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான காத்திருக்கும் பயணிகள் தவிர்த்து வருகின்றனர்.
கர்நாடகா எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் ஏராளமான தமிழர்கள் வேலை பார்த்து வருவதால் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தொழிலாளர்கள் பேருந்து கிடைக்காமல் ஓசூர் பேருந்து நிலையத்தில் தவிக்கின்றனர்.
பேருந்துகள் மட்டுமல்லாது சரக்கு லாரிகளும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வன்முறை வெடித்து பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் அதில் சிக்க கூடும் என்பதால் லாரிகள் ஓசூரில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் இரயில்களிலும் அதிக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.