முல்லைப் பெரியாறு அணையில் ஜனவரி மாதம் நீர்மூழ்கி வீரர்களை கொண்டு சோதனை செய்ய ஐவர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 21ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டது.
அணையின் சுற்றுச்சுவர், நீர்த் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், அணை அமைந்துள்ள இடத்தின் மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல் போன்றவற்றை ஐவர் குழுவினர் சோதனை செய்தனர்.
பிரதான அணைக்கு அருகில் உள்ள பேபி அணைக்கட்டு, உபரி நீர் வெளியேறும் ஷட்டர் பகுதி போன்றவற்றையும் ஐவர் குழு பார்வையிட்டது. புதிய அணை கட்டுவதாக கேரளா அரசு தெரிவித்துள்ள இடத்திலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அணையின் நீர்மட்டம் 132 அடியாக இருந்ததால் தண்ணீர் தேங்கிய இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியவில்லை. இதனிடையே அணையின் உறுதித் தன்மையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இதனால் வருகிற ஜனவரி மாதம் நீர்மூழ்கி வீரர்களை கொண்டு அணையில் தண்ணீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்ய ஆய்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீர்மூழ்கி வீரர்கள் தண்ணீர் புகாத கேமிராக்களை கொண்டு ஆய்வை பதிவு செய்து ஐவர் குழுவிடம் அளிக்க உள்ளனர்.