உகாதித் திருநாளை முன்னிட்டு தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் வாழும் கன்னடம், களிதெலுங்கு மொழிகள் பேசும் மக்கள் தமது புத்தாண்டுத்திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும், உகாதி திருநாள் இந்த ஆண்டில் மார்ச் திங்கள் 16ஆம் நாள் எழுச்சியோடு கொண்டாடப்படுவதை அறிந்து மகிழ்கிறேன்.
தமிழகம் வந்தாரை வரவேற்று வாழவைக்கும் மனவளம் கொண்ட மாநிலம். இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், இங்கு எப்போதும், யாதொரு இடர்ப்பாடும் எவராலும் நேர்ந்ததில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் மனப்பான்மை புறநானூற்றுப் பாடலில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடம் இயல்பாக மிளிர்வதையே இது காட்டுகிறது.
முந்தைய அ.தி.மு.க. அரசு காலத்தில் மறுக்கப்பட்ட உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை 2006க்குப் பின் மீண்டும் நடைமுறைப்படுத்தியது இந்திய அரசு. கடந்த ஆண்டில் பெங்களூரு மாநகரில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை திறப்பு விழா, அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரில் நடைபெற்ற கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா ஆகியவை தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதில் பெரிதும் பயன்பட்டுள்ளன.
மாபெரும் திருவிழாவாக நடைபெற்ற சட்டமன்றப் பேரவை- தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஆந்திர, கர்நாடக, புதுவை மாநில முதலமைச்சர்கள் வருகை புரிந்து கலந்து கொண்ட நிகழ்வும் இம்மாநிலங்களுக்கிடையே நல்லிணக்க மனப்பான்மைகளை வளர்ப்பதில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
இந்த உறவும், உணர்வும் தென்னக மாநிலங்களிடையே மேலும் மேலும் வளம்பெற வேண்டும் என்பது எனது விழைவாகும். இந்த விழைவோடு உகாதித் திருநாள் கொண்டாடும் கன்னட, தெலுங்கு மொழிகள் பேசும் மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது மனமார்ந்த உகாதித் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.