ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. மேலும் வரும் 13ஆம் தேதி இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர்கள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் அந்தோணியார் கோவில் வளாகத்தில் நடந்தது.
கூட்டத்தில், இலங்கை அரசின் அட்டூழியத்தை கண்டித்தும், கடத்தப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத்தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (நேற்று) முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 13ஆம் தேதிக்குள் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 13ஆம் தேதி தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையிலும், தமிழக விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் வேணுகோபால், என்.ஜெ.போஸ் ஆகியோர் முன்னிலையிலும் அனைத்து மீனவர் சங்கங்களும், மீனவ மகளிர் சங்கங்களும் இணைந்து மாலை 4 மணி அளவில் ராமேஸ்வரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க வந்த 31 படகுகளையும், 93 மீனவர்களையும் நீண்ட நாட்களாக இந்தியா விடுவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்றம் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.