உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காமல் கடந்த 20 நாட்களில் 30 குழந்தைகள் இறந்துள்ளனர்.
அலகாபாத்தில் உள்ள சரோஜினி நாயுடு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 100 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் வார்டுகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பியிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 20 நாட்களில் ஆறு மாதக் குழந்தை முதல் இரண்டு வயது வரையுள்ள 30 குழந்தைகள் சரியான சிகிச்சை அளிக்காமல் இறந்துள்ளன.
மருத்துவமனையில் ஒரு படுக்கையில் இரண்டு, மூன்று குழந்தைகளைப் படுக்க வைக்கின்றனர். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஊசி போடுவதற்கான சிரிஞ்சுகளை நோயாளிகளுடன் வந்தவர்களை வாங்கி வருமாறு கூறுகிறார்கள்.
படுக்கைகள் காலியாக இல்லையென்றால், நோயுடன் இருக்கும் குழந்தையை வைத்துக்கொண்டு படுக்கை காலியாகும் வரை வெளியில் காத்திருக்க வேண்டும் நோயாளிகளின் உறவினர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.