லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக் குழு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் சமூக சேவகர் அண்ணா ஹசாரே தனது போராட்டத்தை இன்று முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்தும் அதிக அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான திருத்தப்பட்ட லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதியான அண்ணா ஹசாரே கடந்த 5 ஆம் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இந்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோரை அண்ணா ஹசாரேவின் பிரதிநிதிகளான சுவாமி அக்னிவேஷ், கிரண்பெடி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்தனர். அப்போது இருதரப்பினரும் லோக்பால் மசோதா குறித்த தங்கள் வரைவு திட்டத்தை பரிமாறிக்கொண்டனர்.
இதற்கு இரவு 9.30 மணி வரை, மத்திய அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், தனது உண்ணாவிரதம் நீடிக்கும் என்று ஹசாரே முதலில் அறிவித்தார். ஆனால், அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து நாளை (இன்று) காலை 10 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அண்ணா ஹசாரே அறிவித்தார்.
மத்திய அரசுக்கும், ஹஸôரே பிரதிநிதிகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில், பொதுமக்கள் தரப்பில் 5 பேரும், அரசுத் தரப்பில் 5 பேரும் இடம்பெறுகின்றனர்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குழுவுக்கு தலைவராக இருப்பார். சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், நீர்வளத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் அரசுத் தரப்பில் இடம் பெறுகின்றனர்.
பொதுமக்கள் தரப்பில் சமூக ஆர்வலர் அண்ணா ஹஸôரே, மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம் பெறுகின்றனர். வழக்கறிஞர் சாந்தி பூஷண் குழுவின் இணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.