மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக காவல் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியைக் கைது செய்யும்போது கர்நாடக காவல் துறையினர் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாற்றி மதானி உறவினர் அப்துல் சலாம் கொல்லம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மதானி கேரளாவில் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டுசெல்லப்படும் முன் உள்ளூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியிருக்க வேண்டும் என அப்துல் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இம்மனு நீதிபதி செளந்தரேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதானியைக் கைது செய்து 24 மணி நேரத்துக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலேயே, அவர் நேரடியாக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்தை ஏற்று மதானி உறவினர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி செளந்தரேஷ் தள்ளுபடி செய்தார்.