மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் கைதான ஒரே குற்றவாளியான மொகம்மது அஜ்மல் கஸாப், தன் மீதான குற்றச்சாற்றுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
மும்பையில் நட்சத்திய ஹோட்டல்கள், சிஎஸ்டி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 180 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் கஸாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கஸாப் மீதான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனக்கு இருந்த தொடர்புகளை கஸாப், சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகிலியானியிடம் இன்று ஒப்புக் கொண்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
சி.எஸ்.டி ரயில் நிலையம், தெற்கு மும்பையில் காமா மருத்துவமனைக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் தனக்கு தொடர்பு இருப்பதாக கஸாப் கூறினார்.
தாஜ், ஓபராய் ஹோட்டல்கள் உட்பட 4 இடங்களில் தாக்குதலில் ஈடுபடும் நோக்கத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் தாமும், வேறு 9 பயங்கரவாதிகளும் மும்பைக்கு வந்ததாக கஸாப் குறிப்பிட்டதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.