ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் குகைக்கோயில் புனித யாத்திரை இன்று காலை தொடங்கியது. முதல்குழுவாக 900 யாத்ரிகர்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டனர்.
பகவதி நகர் முகாமில் இருந்து புறப்பட்ட குழுவில் 607 ஆண்கள், 229 பெண்கள், 64 குழந்தைகள் இடம்பெற்றிருந்ததாகவும், இன்று காலை 5 மணியளவில் இக்குழுவினரின் யாத்திரையை மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நவாங் ரிக்ஸின் ஜோரா கொடியசைத்து தொடங்கி வைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த யாத்திரை சுமார் இரண்டரை மாத காலம் நடைபெறும்.
கடந்த 7ஆம் தேதியே தொடங்கவிருந்த அமர்நாத் யாத்திரை கடும் மூடுபனி காரணமாக தாமதமானது.
பத்லால் பகுதியை அமர்நாத் யாத்ரிகர்கள் இன்று மாலை அடைவார்கள் என்று தெரிகிறது.
யாத்ரிகர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு மேற்கொண்டிருப்பதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளது.